மெட்ரோ ரயில் நிதி: தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? லோக்சபாவை அதிரவைத்த திமுக டிஆர் பாலு!
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட ஒதுக்கீடு செய்யவில்லை; மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என லோக்சபாவில் திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி வேதனையை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் 2-ம் கட்டம் 60% நிறைவடைந்தும் விட்டது என்றும் டிஆர் பாலு எம்பி சுட்டிக்காட்டினார்.
18-வது லோக்சபாவின் 2-வது கூட்டம் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை லோக்சபா கூடியதுமே நீட் முறைகேடுகள் விவகாரத்தை முன்வைத்து காரசார விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். ஆனால் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறவில்லை என பதிலளித்தார் தர்மேந்திர பிரதான்.

இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது லோக்சபா திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு பேசியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்தில் 60% பணிகள் நிறைவேறிய நிலையில் கூட மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால், நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு டிஆர் பாலு பேசினார்.
முன்னதாக திமுக எம்பி கலாநிதி வீராசாமி பேசுகையில், நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் நீட தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications