துணிச்சலான தலைமை நீதிபதி என்.வி. ரமணா.. கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மூத்த வழக்கறிஞர்கள்!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், துஷ்யந்த் தவே, துஷார் மேத்தா ஆகியோர் பிரியாவிடை அளித்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது
இன்றுடன் பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்றும் நேற்று முன்தினமும் பல முக்கிய வழக்குகளை விசாரித்தார். மேலும், உச்சநீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை சிறப்பிக்கும் வகையில் முதல்முறையாக அவரது தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகள் இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இன்றுடன் ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு மூத்த வழக்கறிஞர்கள் பிரியா விடை அளித்தனர். மூத்த வழக்கறிஞரான கபில் சிபல், துஷ்யந்த் தவே, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரியாவிடை அளித்தனர். இதில் பேசிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த நாட்டின் ஏராளமான குடிமக்கள் சார்பாக நான் பேசுகிறேன். நீங்கள் மக்களுக்காக எழுந்து நின்றார். அவர்களின் உரிமைகளையும் அரசியலமைப்பையும் நிலைநாட்டினார்.
நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் இடையில் அதிகாரத்தில் சமநிலையை பேணி வந்தீர்கள். என்வி ரமணா முதுகெலும்பு உள்ள நபராக துணிச்சலுடன் செயல்பட்டவர் என்று பாராட்டு தெரிவித்தார். துஷார் மேத்தா அவர் பேசி முடித்துவிட்டு உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார்.
தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேசுகையில், பரபரப்பான நேரங்களிலும் சமநிலையை பேணுவதற்கு அவர் ஆற்றிய பணிக்காக நீதிமன்றம் அவரை என்றும் நினைவில் கொள்ளும். நீதிபதிகளின் குடும்பத்தையும் ரமணா நன்றாக கவனித்து வந்தார். இந்த நீதிமன்றத்தின் கண்ணியமும் ஒருமைப்பாடும் பேணப்படுவதை உறுதி செய்துள்ளீர்கள் என்று தெரிவித்தார்.