ஹோட்டல் - ரெஸ்டாரண்ட்டுகளில் இனி சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோல் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் நிர்வாகங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயமாக சேவை கட்டணத்தை வசூலிக்கும் உரிமை கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்போது நாம் செல்லும் பல ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகள் சாப்பிடும் உணவுகளுக்கு வழங்கப்படும் கட்டணத்துக்கான பில்லில் வரி என்பது சேர்க்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி என்பது நம்மிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பல ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் நம்மிடம் இருந்து சேவை கட்டணம் (Service Charge) என்பது வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டில் சிசிபிஏ எனும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority or CCPA) வழிக்காட்டு விதிமுறைகளை வெளியிட்டது.

அதில் ‛‛உணவு பில்களுடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் என்பது வசூலிக்க கூடாது. வேறு எந்த பெயரிலும் சேவை கட்டணம் என்பது கூடாது. சேவை கட்டணத்தை செலுத்தும்படி வாடிக்கையாளர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தக்கூடாது. சேவை கட்டணம் வழங்குவது என்பது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பம் சார்ந்தது என்று அறிவித்து இருந்தது.
இதற்கு ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து ரெஸ்டாரண்ட் அசோசியேஷன்ஸ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி பிரதீபா எம் சிங் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ‛‛மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்பது வெறும் ஆலோசனை வழங்கும் அமைப்பு இல்லை. அந்த ஆணையம் என்பது நியாயமற்ற முறையில் நடக்கும் வர்த்தக நடைமுறையை தடுப்பது மற்றும் நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் வகையிலான வழிக்காட்டுதல்களை வெளியிடும் அதிகாரம் படைத்த அமைப்பாக உள்ளது.
இதனால் அதன் வழிக்காட்டுதல்கள் ஏற்கப்பட வேண்டியது தான். உணவு பில்கள் செலுத்தும்போது அதற்கான சேவை கட்டணத்தை வழங்குவது என்பது வாடிக்கையாளர்கள் முன்வந்து செலுத்துவது தான். மாறாக உணவகங்கள், ரெஸ்டாரண்ட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது. மீறி வசூலிக்கும்பட்சத்தில் அது சட்டவிரோதமான வர்த்தக நடைமுறைக்கு ஒப்பானதாக கருதப்படும்'' என்று கூறினார். மேலும் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதல்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ரெஸ்டாரண்ட் அசோசியேஷனுக்கு ரூ.1 லட்சம் செலுத்த அதிரடியாக உத்தரவிட்டது.
அதோடு அந்த அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தார் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. ஒருவர் விரும்பினால் மட்டுமே தாமாக முன்வந்து சேவை கட்டணம் செலுத்தலாம். மற்றபடி ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் சேவை கட்டணம் செலுத்தும்படி கூறினால் அதனை பொதுமக்கள் புறக்கணிக்கலாம் என்பது இந்த நீதிமன்ற தீர்ப்பின்படி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications