டெல்லியில் இன்று தேசியவாத காங்கிரஸ் செயற்குழு கூட்டம்.. முக்கிய முடிவெடுக்கும் சரத் பவார்.. பரபர!
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் நடைபெறும் செயற்குழு கூட்டம் என்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, எதிர்க்கட்சித்தலைவர் அஜித் பவார் மற்றும் மற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் அஜித் பவார் துணை முதல்வராகவும், 9 என்சிபி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 பேர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் நேற்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தனித்தனியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை ஒய்.பி சவான் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 32 என்.சி.பி எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதனால், தேசியவாத காங்கிரஸ் பிளவு தேர்தல் ஆணையத்திற்குச் சென்றுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று கட்சியினர் மத்தியில் பேசிய சரத் பவார், கட்சியின் பெயரும் சின்னமும் யாரிடமும் செல்லப்போவது இல்லை, தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர் என்றார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இந்தச் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications