பிரணாப் முகர்ஜியின் சிவப்பு டைரி.. புதைந்திருக்கும் அரசியல்.. வெளியானால் புயலைக் கிளப்புமா?
டெல்லி: இந்திய அரசியலையே உலுக்கி எடுக்கும் வகையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகள் பகிரங்கப்படுத்தப்படுமா? என்பது டெல்லி அரசியலின் ஹாட் டாபிக்.
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. தமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை டைரியில் எழுதும் பழக்கத்தை கொண்டிருந்தவர்.

கனவாக பிரதமர் பதவி
அவர் மரணிப்பதற்கு 48 மணிநேரத்துக்கு முன்னர்வரை டைரி குறிப்புகளை எழுதியிருந்தார். இந்த டைரி குறிப்புகளை பற்றி முன்னர் குறிப்பிடுகையில், அதில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன என தெரிவித்திருந்தார். பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது பிரதமர் பதவி தமக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை. பின்னர் ராஜீவ்காந்தி படுகொலையின் போதும் பிரதமர் பதவியை எதிர்பார்த்தவர் பிரணாப். அப்போதும் அவரது கனவு நிராசையானது.

ஜனாதிபதி மாளிகையில்...
ஒருகட்டத்தில் அவரது பிரதமர் பதவி கனவுக்கு முடிவுரை எழுதி ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இத்தகைய மிக முக்கியமான தருணங்கள் அனைத்தையுமே தமது டைரியின் பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. அண்மையில் உடல்நலக் குறைவால் பிரணாப் முகர்ஜி காலமானார்.

மகள் வசம் டைரிகள்
அவரது மறைவுக்குப் பின்னர் இப்போது பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகள் குறித்துதான் டெல்லி அரசியல் பேசுகிறது. அந்த டைரி குறிப்புகள் அனைத்தும் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியின் வசம் இருக்கிறது.

வெளியாகுமா பிரணாப் டைரிகள்?
இந்த டைரி விவரங்கள் வெளியிடப்பட்டால் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தர்மசங்கடமாக இருக்கும் என்கின்றனர் டெல்லி அரசியல்வாதிகள். இதனை வெளியிடுவாரா அல்லது பிரணாப் மரணத்துடன் எல்லாமும் முடிந்தது என எரித்து சாம்பலாக்குவாரா? என்பது ஷர்மிஸ்தா முகர்ஜியின் கைகளில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications