டெல்லி 16 வயது சிறுமி கொலை.. என்னை கண்டு கொள்ளவில்லை.. அதான் கொன்றுவிட்டேன்.. கூலாக சொன்ன கொடூரன்!
டெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமியை கொடூரமாக 22 முறை கத்தியால் குத்தி கல்லை தூக்கி போட்டு இளைஞன் கொலை செய்த சம்பவம் நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. இதனிடையே போலீசாரிடம் விசாரணையில், சிறுமியை கொலை செய்ததில் தனக்கு வருத்தம் இல்லை என அதிர்ச்சியளிக்கும் வகையில் பதில் கொடுத்துள்ளான்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒருபக்கம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிர்பயா நிதியின் கீழ் மத்திய அரசால் அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் கூட குற்றங்களும்.. அநீதிகளும்.. குறைந்தபாடில்லை. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அவ்வபோது நெஞ்சை உலுக்கும் வகையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதேபோன்ற ஒரு சம்பவம் தான் டெல்லியில் மீண்டும் நடந்து நாட்டையே அதிர வைத்துள்ளது. டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள ரோகிணி ஷகாபாத் பால் பண்ணை பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இளைஞர் ஒருவருக்கும் 16-வயது சிறுமி ஒருவருக்கும் நேற்று முன் தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதும் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது.
சிறுமியுடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த அந்த இளைஞன் ஒரு கட்டத்தில் பெண்ணை , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 22 இடங்களில் குத்தினான். அப்போதும் ஆத்திரம் தீராமல் தலையில் கல்லை போட்டு கொலை செய்தான். இந்த அத்தனை நிகழ்வுகளையும் அவ்வழியாக சென்றவர்கள் பலரும் பார்த்தும்.. கண்டு கொள்ளாமல் சென்றதுதான் வேதனையின் உச்சம். 16 வயது சிறுமியை கொடூரமாக இளைஞன் கொலை செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிரவைத்தது.
இந்தக் காட்சிகளை வைத்து 16 வயது சிறுமியை கொலை செய்த இளைஞனை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அந்த இளைஞன் பெயர் சாகல் (வயது 20) என்பதும், ஏ.சி. மெக்கானிக் என்பதும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சிறுமியுடன் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்றும் சொல்லப்பட்டது. தலைமறைவாக இருந்த சாகலை உத்தர பிரதேசத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
16 வயது சிறுமியை கொடூரமான முறையில் கொலை செய்த சாகல் என்ற மனித மிருகத்தின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, சிறுமியை கொலை செய்தததில் தனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை எனவும், தன்னை கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததால் ஆத்திரத்தில் இப்படி செய்து விட்டதாகவும் சாகல் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், தன்னிடம் இருந்து விலகி செல்லுமாறும் அப்படி செய்யாவிட்டால் காவல் நிலையத்திற்கு செல்வேன் என்றும் சாகலை சிறுமி மிரட்டியதாகவும் பொம்மை துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாகவும் போலீசிடம் சாகல் கூறியுள்ளானாம். இந்த கொடூர கொலை நடப்பதற்கு முந்தைய நாளே இருவருக்கும் சண்டை இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications