இந்தியாவுக்கு எதிரான போராட்டம்.. வங்கதேச அரசு தூண்டி விடுகிறது! ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
டெல்லி: தற்போது வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு காரணம் வங்கதேசத்தின் தற்போதைய தலைவர் யூனுஸ் தலைமையிலான அரசாங்கம்தான் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருக்கிறார்.
ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது, "அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை யூனுஸ் ஆட்சியால் தூண்டிவிடப்பட்ட தீவிரவாதிகளால் உருவாக்கப்படுகிறது. இந்தியத் தூதரகத்திற்கு எதிராக பேரணி நடத்தியவர்கள், எங்கள் ஊடக அலுவலகங்களைத் தாக்கியவர்கள், எந்தத் தண்டனையும் இன்றி சிறுபான்மையினரைத் தாக்குபவர்கள், என் குடும்பத்தையும் என்னையும் உயிருக்குப் பயந்து தப்பி ஓடச் செய்தவர்கள் ஆகியோரே இந்தச் சக்திகள்.

போராளிகள்
யூனுஸ் இத்தகைய நபர்களை அதிகாரப் பதவிகளில் அமர்த்தி, தண்டனை பெற்ற பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்துள்ளார். தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் நியாயமானவை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொறுப்பான அரசாங்கம் தூதரகப் பணிகளைப் பாதுகாத்து, அவற்றை அச்சுறுத்துபவர்கள் மீது வழக்குத் தொடுக்கும். மாறாக, யூனுஸ் குண்டர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களைப் போராளிகள் என்று அழைக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டு
சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தார். இப்படி இருக்கையில் இந்த படுகொலை நடத்திருக்கிறது. இந்த கொலைக்கு காரணம் இந்தியாதான் என்று மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாற்றியமைக்கப்படும் கொள்கைகள்
இப்படி இருக்கையில்தான் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தின் தற்போதைய தலைவரை விமர்சித்திருக்கிறார். பேட்டியில் மேலும் அவர் கூறுகையில், "வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க யுனுஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவர் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். இப்படியான தலைவரால் எடுக்கப்படும் முடிவுகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். மீண்டும் வங்கதேச மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும்போது, இப்போது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் மீண்டும் திருத்தப்படும்.
இடைக்கால அரசு
எங்களுடைய வெளியுறவுக் கொள்கை, தற்காலிகமாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தீவிரவாதிகளின் சித்தாந்தக் கற்பனைகளுக்குப் பதிலாக, நம் தேசிய நலன்களுக்குச் சேவை செய்யும். வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் அடிப்படையானவை, இந்த இடைக்கால அரசு நீங்கிய பிறகும் அவை நீடிக்கும்.
ஜனநாயகத்திற்கு எதிரானது
வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு நீதித்துறை படுகொலை. எனக்கு வழக்கறிஞரை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை. என்னுடைய அவாமி லீக் கட்சியை ஒடுக்கவே என் மீது விசாரணை நடத்தப்பட்டது. நாங்கள் இப்போது களத்தில் இல்லை. நாங்கள் இல்லாமல் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது. அவாமி லீக் கட்சி இல்லாமல் நடத்தப்படும் தேர்தல் ஒரு தேர்தலே அல்ல, அது ஒரு முடிசூட்டு விழா. 9 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை தடை செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications