ஏழைகளுக்கு சோறு போடுவது தவறென்றால்..அதனை 1000 முறை செய்வேன்.. பிரதமருக்கு பதிலடி கொடுத்த பெண் எம்.பி
டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் டிக்கெட்டுகள் எடுத்து மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததால் தான் கொரோனா பரவியது என்ற பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா கட்சியின் பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஏழைகளுக்கு உணவு தண்ணீர் கொடுப்பது பிரதமரின் பார்வையில் தவறென்றால் அதனை 100 மடங்கு செய்வேன் என ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
கொரோனா காலத்தில் எழுந்த பிரச்சினைகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடி முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது. முன்னறிவிப்பு இல்லாமல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு நடந்தே செல்லும் காட்சிகள் நாட்டையே உலுக்கியது.
உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மாநில எல்லைகளில் காவல்துறையினரின் அடக்குமுறை உள்ளிட்ட செயல்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது அரசின் கையாலாகத்தனம் என எதிர்கட்சிகள் குற்றம்ச்சாட்டின. உலக அளவிலும் இச்செய்தி தலைப்புச் செய்தியானது.

மக்களவையில் பிரதமர் பேச்சு
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்து வந்தார். கொரோனா காலத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்ததாக கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

டெல்லி அரசு மீது குற்றச்சாட்டு
மேலும், கொரோனா தொற்றின்போது மும்பையிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வெளியேற காங்கிரஸ் இலவச ரயில் டிக்கெட்டுகளையும், டெல்லி அரசு பேருந்து வசதியையும் செய்து கொடுத்தது என பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதன் விளைவாகதான் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது என குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்தோரை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ததாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

தவறை 100 மடங்கு செய்வேன்
இந்நிலையில் பிரதமரின் பேச்சு குறித்து ட்விட்டரில் பதில் அளித்துள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, "இந்த தவறை 100 மடங்கு .. மனித நேயத்திற்காக செய்வேன்" என்றும் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு, ரயில்கள் நிறுத்தப்பட்டன, மாநிலங்களுக்கு இடையேயான பயணம் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்தோர் - முக்கியமாக தினசரி கூலித் தொழிலாளர்கள் சிக்கித் தவித்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்வது - உணவு மற்றும் தங்குமிடம் என்பது பிரதமரின் பார்வையில் தவறாக இருந்தால், இந்த தவறை 100 மடங்கு செய்வேன்.. மனித நேயத்திற்காக." என பதிவிட்டுள்ளார்.

பிரதமருக்கு கண்டனம்
பிரதமரின் நேற்றைய பேச்சுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், பிரதமரின் பேச்சு அப்பட்டமான பொய் என்று கடுமையாக எதிர்வினையாற்றினார். மேலும் சிவசேனா , காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமரின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பேச்சுக்கு நேற்றிலிருந்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications