“பேட்டி பச்சாவ்” என்றனர்.. பாலியல் குற்றவாளிகளை காக்கின்றனர் - பில்கிஸுக்கு நீதி தேவை -ராகுல் காந்தி
டெல்லி: மகள்களை காப்போம் என்று முழங்குபவர்கள் பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றுவதாக, பில்கிஸ் பானு உள்ளிட்ட 3 பேரை கூட்டு பலாத்காரம் செய்து குழந்தை உட்பட 7 பேரை கொன்ற 11 பேர் கொண்ட கும்பலை குஜராத் அரசு முன்விடுதலை செய்ததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.
மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாடு பயணம்..ராகுல், பிரியங்கா உடன் பயணம்
கலவரம்
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
பில்கிஸ் பானு
28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
கூட்டு பலாத்காரம்
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 19 வயது இளம் பெண் பில்கிஸ் பானு, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
விடுதலை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இந்த நிலையில், 11 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்கியது. அப்போது 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ராகுல் காந்தி கண்டனம்
இதற்கிடையே பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து 7 பேரை படுகொலை செய்த, 11 பேரை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள பதிவில், "மகள்களை காப்போம்" என்று முழக்கமிடுபவர்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகளை காக்கின்றனர். பெண்களின் உரிமை மற்றும் மரியாதை தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.