சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!
டெல்லி: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் அக்கவுண்ட்டில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கக் கோரும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க தயார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொய் செய்திகள், ஆபாச படங்கள் பகிரப்படுவதை தடுக்க ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் கணக்குகளுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதேபோன்ற வழக்குகள் மும்பை மற்றும் போபால் உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த மீதான விசாரணையில், ஃபேஸ்புக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இதை ஃபேஸ்புக் தரப்பு நிராகரித்தது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் மொத்தமாக விசாரிக்கும். இவ்வழக்கில் மத்திய அரசு, கூகுள், ட்விட்டர் மற்றும் யூ டியூப் நிறுவனங்கள் செப்டம்பர் 13-ந் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்ப இயலாத நிறுவனங்களுக்கு இ மெயிலில் அனுப்பி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications