"என்கிட்ட பேசாதீங்க.." என்று சோனியா காந்தி சொல்வதா.. இது மிரட்டல்.. நிர்மலா சீதாராமன் ஆவேசம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயல் சில லோக்சபா எம்.பிக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடபாக அமலாக்கத்துறையினர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில், இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என குறிப்பிட்டார்.
அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார்.

பாஜக கண்டனம்
இந்த நிலையில் ஜனாதிபதி குறித்து அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது சோனியா காந்தியின் பெயரை குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் சோனியா காந்திக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். பாஜகவினரும் இதற்கு பதில் கருத்து தெரிவித்தனர். இதனால் கருத்து மோதல் ஏற்பட்டு அவையில் கூச்சல் நிலவியது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும் திரெளபதி முர்மு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர், பெண்களையும், பழங்குடியின மக்களையும் இழிவுப்படுத்தும் நோக்கத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியிருக்கிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி இருந்து வரும் நிலையில், தொடர்ச்சியாக காங்கிரசார் பெண்களை அவதூறாக பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி திரவுபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்துள்ளார்'' என கூறினார்.

மிகுந்த கோபத்துடன் . .
இவ்வாறாக மாறி மாறி கருத்து மோதல் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்புக்கு மத்தியில் சோனியா காந்தி, பாஜகவின் எம்பி ரமாதேவியை சந்தித்து பேசினார். அப்போது, ‛‛இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். இதில் என்னை ஏன் இழுக்கின்றனர்'' என கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மிருதி இரானி குறுக்கீட முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சோனியா காந்தி, ‛‛என்னுடன் பேச வேண்டாம்'' என மிகுந்த கோபத்துடன் கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

அச்சுறுத்தும் வகையில் உள்ளது
சோனியா காந்தியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், "சவுத்ரியின் கருத்து வாய் தவறி வந்தது போல தெரியவில்லை. அவர் வேண்டும் என்றே ஜனாதிபதிக்கு எதிராக இழிவான கருத்துக்களை கூறியிருக்கிறார். பழங்குடியின பெண் ஒருவர் ஜனாதிபதி ஆனதை நாடே கொண்டாடி கொண்டிருக்கும் சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை ராஷ்ட்ர பத்னி எனக்கூறி இழிவு செய்து இருக்கிறார். இதற்காக சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும்" என்றார். இது குறித்து நிர்மலா சீதாராமன் மேலும் பேசுகையில், ''எங்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ரமா தேவியை நோக்கி சோனியா காந்தி வந்தார். அப்போது அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என அறிய சில எம்.பிக்கள் அங்கு சென்றனர். அந்த நேரத்தில் சோனியா காந்தி , "நீங்கள் என்னிடம் பேச வேண்டாம்" எனக் கூறினார். சோனியா காந்தி செயல் சில சோக்சபா எம்.பிக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications