ஜாதி அரசியலின் பெயரில் அமைதியைச் சீர்குலைக்க விஷத்தை பரப்பும் சதி.. ராகுல் காந்தி மீது மோடி அட்டாக்!
டெல்லி: ஜாதி அரசியலின் பெயரில் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க சிலர் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் கிராமங்களின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இந்த சதிகாரர்களின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 பெருவிழாவை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: கிராமங்களில் பிறந்து வளர்ந்த நாம் அனைவரும் கிராமங்களின் திறனை அறிவோம். கிராமத்தின் உணர்வு கிராமங்களில் வசிப்பவர்களிடமும் உள்ளது. கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிராமத்தின் உண்மையான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பது தெரியும். நான் சிரமங்களை அனுபவித்தேன், கிராமத்தின் சாத்தியக்கூறுகளையும் நான் அறிவேன்.

கிராம மக்கள் பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட பலங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான தேடலில் அவர்கள் அவற்றை இழக்கிறார்கள. இயற்கை பேரழிவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சந்தை வாய்ப்புகள் இல்லாமை போன்ற பல்வேறு சவால்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் கிராமங்களில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகள் மற்றும் அனுபவங்களால் உத்வேகம் பெற்றவை.
அதிகாரம் பெற்ற கிராமப்புற இந்தியாவை உறுதி செய்வது, கிராமவாசிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குவது, இடப்பெயர்வைக் குறைப்பது, கிராம மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வது ஆகியவைதான் தொலைநோக்குப் பார்வை. கிராமப்புற இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கப்பட்டன; ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் உறுதி செய்யப்பட்டன.
இ-சஞ்சீவினி மூலம் கிராமப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலை மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி நபருக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை அரசு உறுதி செய்தது.
கடந்த 10 ஆண்டுகளில், கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசு சிறப்புக் கொள்கைகளை வகுத்து முடிவுகளை எடுத்துள்ளது. பிரதமரின் கிசான் வெகுமதி நிதி மூலம் விவசாயிகள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியைப் பெற்றுள்ளனர் . கடந்த 10 ஆண்டுகளில், எம்.எஸ்.எம்.இ.க்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு கொள்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன
நோக்கங்கள் உன்னதமாக இருக்கும்போது, முடிவுகள் திருப்திகரமாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, கிராமப்புறங்களில் உணவுக்கான செலவு 50% க்கும் குறைவாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான நுகர்வு இடைவெளி குறைந்துள்ளது .
இந்தச் சாதனைகள் முந்தைய அரசுகளின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும். ஆனால் சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களாக, லட்சக்கணக்கான கிராமங்கள் அடிப்படைத் தேவைகளை இழந்திருந்தன. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களில் பெரும்பான்மையானவர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள்; அவர்கள் முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள்; இது கிராமங்களிலிருந்து இடம்பெயர்வதற்கும், வறுமை அதிகரிப்பதற்கும், கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது. எல்லைப்புற கிராமங்கள்தான் நாட்டின் கடைசி கிராமங்கள். பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், பல ஆண்டுகளாக வளர்ச்சி மறுக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் பிரதமரின் ஜன் மன் திட்டம் தொடங்கப்பட்டது. தலித், வஞ்சிக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்காகவும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன்.
ஜாதியின் பெயரால் சமூகத்தில் நஞ்சைப் பரப்பவும், சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்தவும் சிலர் முயற்சிக்கின்றனர். இந்த சதிகளை முறியடித்து, கிராமத்தின் பகிரப்பட்ட கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர்தான், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை பாஜக தலைவர்கள் ஜாதிய அரசியல் விமர்சித்து வருகின்றனர். இதனையே பிரதமர் மோடியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications