வைரஸ் போல் இந்தியாவில் பரவி வரும் வெறுப்புணர்வு, பிரிவினைவாதம்.. சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி: இந்தியாவில் வெறுப்புணர்வும் பிரிவினைவாதமும் வைரஸ் நோயை போல் பரவி வருகிறது என காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தி இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், இந்தியாவில் ஒரு பிரச்சினையை கிளப்பி அதற்கு எதிர்ப்புகள் எழுவது அவ்வப்போது நடைபெறுகிறது. ஆளும் கட்சியினர் அத்தகைய சூழலைத்தான் விரும்புகிறார்கள்.
உடை, உணவு, நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றில் இந்தியர்கள் இந்தியர்களை எதிர்த்தே போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். முரண்பட்ட சக்திகளுக்கு ஊக்கமானது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது.

எதிர்காலம்
புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இளைஞர்களை உற்பத்தித் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் நமது வளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக கற்பனையான ஒரு காலத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது கேலிக்குரியதாகும். இந்தியாவின் பன்முகத்தன்மைகளை ஒப்புக் கொள்வது குறித்து பிரதமர் அதிகம் பேசி வருகிறார்.

கசப்பான உண்மை
ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டு வைக்கப்பட்ட பன்முகத்தன்மைகள் தற்போது பிளவுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. வாழ்வாதாரத்தை உயர்த்தவும் சமூக நல திட்டங்களுக்கு தேவையான வருவாயை உருவாக்கவும், நமது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கவும் பொருளாதார வளர்ச்சியை அதிகளவில் தக்க வைத்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

பிரிவினைவாதம்
ஆனால் வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் உள்ளிட்டவை பொருளாதார வளர்ச்சியின் அடிநாதத்தையே அசைத்து பார்க்கிறது. கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதை சில துணிச்சலான கார்ப்பரேட் நிறுவனங்கள் (நம் நாட்டின் சக்தி வாய்ந்த தொழில் நிறுவனங்கள்) பேசுகின்றன. அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது போல் தைரியமாக பேசுபவர்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் எதிர்கருத்துகளும் எழுகின்றன.

தொழிலதிபர்கள்
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தொழிலதிபர்கள் தங்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அறிமுகப்படுத்திக் கொள்வதில் எந்த ரகசியமும் இல்லை. பண்டிகை காலங்களின் போது நடந்த கொண்டாட்டங்கள், வெவ்வேறு சமூகத்தினரிடையே உள்ள நல்லுறவுகள், கலை சினிமாவில் நம்பிக்கை வைப்பது உள்ளிட்டவை காலம் காலமாக நம் சமூகத்தின் பெருமைகளாகும்.

சமூக ஆர்வலர்கள்
சமூக ஆர்வலர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு அமைதியாக்கப்படுகிறார்கள். சமூக வலைதளங்களை குறிப்பாக பொய் மற்றும் விஷ பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பயமுறுத்துதல், ஏமாற்றுதல், மிரட்டல் ஆகியவையே இந்த அரசின் வியூகமாக உள்ளது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை அடுத்து நவம்பர் 26ஐ அரசியலமைப்பு தினமாக பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டாட தொடங்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு நிறுவனத்தையும் திட்டமிட்டு வெளியேற்றி வரும் மத்திய அரசு அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுவது சுத்த போலித்தனமாகும்.

100 ஆண்டுகள்
பொங்கி எழும் வெறுப்பு எனும் சுனாமியை அடக்குவோம். 100 ஆண்டுகளுக்கு முன்னர் தாகூர் எழுதிய கீதாஞ்சலியில் "எங்கே மனம் பயமில்லாமல் இருக்கிறது என்ற வரிகள் இந்த அரசாங்கத்திற்கு பொருத்தமானது. அந்த வரிகள் இன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சோனியா காந்தி தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications