ராகுல் காந்தி கோரிக்கையை ஏற்றது அமலாக்கத்துறை.. நாளை விசாரணை கிடையாது.. அடுத்து எப்போ?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாள் தொடர் விசாரணை நடத்தினர். இன்று ராகுலுக்கு ரெஸ்ட் வழங்கப்பட்டு இருந்த நிலையில் நாளை ராகுல் காந்தி மீண்டும் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக 3 நாள் அவகாசம் வழங்கும்படி ராகுல்காந்தி அனுமதி கோரியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராககோரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்திக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது.

3 நாள் விசாரணை
அதன்படி ஜூன் 13 முதல் நேற்று வரை தொடர்ந்து 3 நாட்கள் ராகுல்காந்தி அமலாக்கத்துறை பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். முதல் நாள் ராகுல்காந்தியிடம் 10 மணிநேரமும், 2வது நாள் 12 மணிநேரமும் விசாரணை நடந்த நிலையில் 3வது நாளான 8 மணிநேரம் விசாரணை நடந்தது.

இன்று ரெஸ்ட்
இந்த நேற்றைய விசாரணைக்கு பிறகு மீண்டும் ராகுல்காந்திக்கு சம்மன் வழங்கப்பட்டது. இன்று ராகுல்காந்தி ஓய்வு கேட்ட நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். இதனால் இன்று அமலாக்கத்துறை முன்பு ராகுல்காந்தி ஆஜராகவில்லை.

அனுமதி கோரிய ராகுல்
இந்நிலையில் நாளை ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று அவர் அமலாக்கத்துறை பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதிகோரி கடிதம் எழுதியுள்ளார். அதில் மறுவிசாரணைக்கு ஜூன் 20ல் ஆஜராகிறேன். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய் சோனியா காந்தியின் உடல்நலனை குறிப்பிட்டு அவர் 3 நாள் அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சோனியா காந்திக்கு என்னாச்சு?
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் தான் அமலாக்கத்துறை பிரிவினர் விசாரணை நடத்த சம்மன் வழங்கினர்.ஆனால் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் 3 நாள் விசாரணைக்கு பிறகு ராகுல்காந்தியும் தனது தாயின் உடல்நலத்தை காரணம் காட்டி 3 நாள் அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடரும் போராட்டம்
முன்னதாக ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள், மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இன்றும் கர்நாடகம், டெல்லி, ஐதராபாத் உள்பட பல இடங்களில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அவகாசம் அளித்தது அமலாக்கத்துறை
வெள்ளிக்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, வரும் திங்கட்கிழமை (ஜூன் 20 ஆம் தேதி) அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications