"எல்லாம் சோனியா காந்தி கையில் தான் உள்ளது!" பிகே திட்டத்திற்கு கிடைக்குமா கிரீன் சிக்னல்! பரபர தகவல்
டெல்லி: தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, 5 மாநில தேர்தலில் ஆட்சியில் இருந்த பஞ்சாபில் மாநிலத்தில் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த 5 மாநில தேர்தலில் தோல்வி காங்கிரஸ் தலைமை மீதான அழுத்தத்தை அதிகரித்தது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தேர்தல் தோல்வி அதை மீண்டும் எழுப்பியது.
“மிஷன் 2024” 3 நாட்களில் 2வது முறை..சோனியாவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்! பாஜகவை தூக்க பக்கா ப்ளான்
தீவிர ஆலோசனை
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது 2024 பொதுத் தேர்தலுக்கான திட்டம் குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து பிகே முன்மொழிந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். முதலில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, அதன் பின்னரே நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மூத்த தலைவர்
இந்த கட்சியின் ஆலோசனைக்குப் பின்னர், அவர் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக பிரசாந்த் கிஷோரையும் சந்தித்தார். இருப்பினும் இந்த சந்திப்பில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக காங். மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இறுதி முடிவைச் சோனியா காந்தி எடுப்பார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.
சோனியா காந்தி
பிகே கட்சியில் சேருவாரா அல்லது ஆதரவளிப்பாரா என்பது குறித்து இறுதி முடிவைச் சோனியா காந்தி எடுப்பார். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் அதற்கு முன்பு நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு அவர் ஆதரவு அளிப்பார்" என்றார். பிரசாந்த் கிஷோர் திட்டத்தைப் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த குழு ஒரு வாரத்தில் தனது இறுதி பரிந்துரையைச் சோனியா காந்தியிடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர ஆலோசனை
அடுத்து சில நாட்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் பிரசாந்த் கிஷோர் விவகாரத்தில் கட்சியின் முடிவு அதில் எடுக்கப்படும். கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி பிகே, அவர்கள் வெற்றிக்குப் பெரியளவில் உதவினார். காங்கிரஸ் தலைமையிடம் பிரசாந்த் கிஷோர் திட்டத்தை முன்மொழிந்தார். இந்த திட்டம் குறித்து ஆலோசித்து இறுதி முடிவை எடுக்க சோனியா காந்தி சிறிய குழுவை அமைத்துள்ளார். அந்த குழு தீவிர ஆலோசனையில் இப்போது ஈடுபட்டுள்ளது.
பிகே திட்டம்
பிகே முன்மொழிந்த திட்டத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெற உள்ள ஹிமாச்சல பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பூத் அளவில் வாட்ஸ்அப் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அனைத்து மாநிலங்களிலும் பலம் மற்றும் பலவீனத்தைப் பட்டியலிட்டு, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை முன்னிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மெகா வெற்றிக்குப் பின்னர், காங்கிரஸ் தலைமை உடன் பிகே ஆலோசனை நடத்தத் தொடங்கினார். அப்போதே அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இரு தரப்பும் விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக, ராகுல் காந்தியைக் குறிவைத்து பிரசாந்த் கிஷோரின் கடுமையான ட்வீட்கள் அதையே காட்டியது. இந்தச் சூழலில் காங்கிரஸின் சமீபத்திய தேர்தல் தோல்விகள், பிகே உடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வைத்துள்ளது.