ரியல் “காப்பான் சூர்யா”.. எஸ்பிஜி தலைவரின் உயிரை பறித்த கேன்சர்! யார் இந்த அருண் குமார் சின்ஹா?
டெல்லி: உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டு போராடி வந்த எஸ்பிஜி தலைவர் ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார் சின்ஹா இன்று காலமானார்.
காப்பான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா இந்திய பிரதமரை பாதுகாக்கும் எஸ்பிஜி அதிகாரியாக நடித்து இருப்பார். அந்த எஸ்பிஜி பிரிவின் தலைவர்தான் அருண் குமார் சின்ஹா. இந்திய அளவில் புகழ்பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாக திகழ்ந்தவர் அருண் குமார் சின்ஹா. 1987 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக சிறப்பு பாதுகாப்பு குழுவான (எஸ்.பி.ஜி) இயக்குநர் பணிக்கு மாற்றப்பட்டார். பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதே அவரது முக்கியப் பொறுப்பு.

மே 31ல் அவர் ஓய்வுபெற்ற பிறகு பிறகு ஒரு ஆண்டு காலத்திற்கு எஸ்.பி.ஜி இயக்குநராக அவரது பதவி காலத்தை மத்திய அரசு நீட்டித்தது. ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் பதவிக்காலத்தை நீட்டிக்க ஏற்ற விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக அருண் குமார் சின்ஹாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அதன் பிறகு பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது. அருண் குமார் சிங்கா தனது பணிகாலத்தின் துடிப்பான போலீஸ் அதிகாரியாக செயல்பட்டார். கேரள மாநிலத்தில் சிறப்பு சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரிவு கூடுதல் டி.ஜி.பி உள்ளிட்ட பதவிகளில் அவர் அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் பணியாற்றியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் என்.ஆர்.ஐ. விவகாரங்களில் அவரது பங்களிப்பால் பல்வேறு பாராட்டுக்களை அவர் பெற்று உள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையான (பி.எஸ்.எஃப்) இன் ஒரு பகுதியாக அவர் முழு மூச்சுடன் அவர் செயல்பட்டார். காவல்துறையில் சிறந்த அதிகாரியாக அவர் அறியப்பட்டார்.
பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சட்ட அமலாக்கத்தின் நுணுக்கங்களைப் பற்றிய விரிவான புரிதலுடன், அருண் சிங்கா சுமார் 3,000 திறமையான அதிரடிப் படையினர் கொண்ட ஒரு சக்திவாய்ந்த குழுவை வழிநடத்தினார். அவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல் துறை பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
எஸ்.பி.ஜிக்கான புதிய வழிகாட்டுதல்களை அரசாங்கம் அண்மையில் அமல்படுத்தியதை ஒட்டி, அருண் குமார் சிங்காவை மீண்டும் எஸ்.பி.ஜி இயக்குநராக நியமிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, ஐ.பி.எஸ் கூடுதல் டி.ஜி.பி. தரத்தில் இருப்பவர்கள் எஸ்பிஜியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்படி எஸ்பிஜி அதிகாரியாக மத்திய அரசு பணிப்பிரிவிற்கு சென்ற அருண் குமார் சின்ஹா, திறமையான பணிகளால் நற்பெயரை பெற்றார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரிபார்க் பகுதியில் பிறந்து கேரள காவல் துறையில் 1987 ஆம் ஆண்டு முதல் பணியை தொடங்கி, பிரதமருக்கு எதிரான அச்சுறுத்தல்களை தடுக்கும் எஸ்பிஜிக்கு தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்த அருண் குமார் சின்ஹாவால் உயிர்கொல்லியான கேன்சரை தடுக்க முடியவில்லை.
கேன்சருடன் பல நாட்கள் போராடி வந்த அவர் இன்று காலமானார். அவரது மரண செய்தி காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications