குஜராத்தில் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இலங்கை ஈஸ்டர் தின குண்டு வெடிப்புகளில் தொடர்பு?
டெல்லி: குஜராத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளில் தொடர்பிருக்கலாம் என இலங்கை காவல்துறை தலைவர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முகாம்களை நடத்தி தீவிர ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது. இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு நாளில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் 269 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னரான மிக மோசமான பேரழிவு இது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 சந்தேக நபர்களை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அண்மையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் துருவித் துருவி நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இலங்கையைச் சேர்ந்த முகமது பரீஸ், முகமது நஃப்ரான், முகமது ரசுதீன், முகமது நுஸ்ரத் ஆகியோர் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் 4 பேரும் குஜராத் வந்திறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த 4 பேரில் ஒருவருக்கு இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாக இலங்கை காவல்துறை தலைவர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருக்கிறார். ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்படும் குற்றவாளியின் பெயரும் இந்தியாவில் சிக்கிய 4 பேரில் ஒருவரது பெயரும் ஒன்றாக இருப்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் தென்னகோன் கூறினார்.
மேலும் இந்தியாவில் சிக்கிய 4 பேர் குறித்து விசாரிக்க தனி குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தென்னகோன் தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் சிக்கியவர்களில் ஒருவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்; எஞ்சிய 3 பேரும் கொழும்பு புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தென்னகோன் கூறினார்.












Click it and Unblock the Notifications