இலங்கை ஜனாதிபதி தேர்தல்: "சிங்கள பேரினவாத இடதுசாரி" அனுரகுமார திசநாயக்கவுக்கு இந்தியா ஆதரவா?
டெல்லி: இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் ஆதரவு யாருக்கானது? என்பது குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சிங்கள பேரினவாத கட்சியான ஜேவிபி- தேசிய மக்கள் சக்தி உள்ளடக்கிய இடதுசாரி வேட்பாளரான அனுர குமார திசநாயக்கவின் சில மாதங்களுக்கு முந்தைய இந்திய பணம் இப்போதும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இலங்கையில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்சே, அனுர குமார திசநாயக்க, அரியநேந்திரன் உள்ளிட்ட பலரும் களம் காண்கின்றனர். இத்தேர்தலின் பிரதான போட்டி ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்சே, அனுர குமார திசநாயக்க இடையேதான் இருக்கும் என்பது பொதுவான கருத்து.

அரசியல் கட்சிகளில் பிளவு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் உடைவதும் புதிய அரசியல் கட்சிகள் உருவெடுப்பதும் இயல்பான ஒன்றுதான். இப்போதைய தேர்தலில் நமல் ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் ஒரு பிரிவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்கிரமசிங்கே பக்கம் சாய்கின்றனர். இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உடையக் காத்திருக்கிறது.
இந்தியாவில் அனுர குமார திசநாயக்க: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் இந்தியா, சீனாவின் நிலைப்பாடுகள், இந்தியா- சீனா சார்பு வேட்பாளர்கள் குறித்த விவாதமும் நடைபெறும். இந்த முறையும் சில மாதங்களுக்கு முன்னரே இந்த விவாதம் தொடங்கியது. அதாவது இலங்கையில் பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித்துக்கு அப்பால் ஜேவியின் அனுர குமார திசநாயக்க திடீரென கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பயணம் மேற்கொண்டார். டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்தார். இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் இப்போது தொடரச் செய்கிறது.
என்ன செய்யும் ஜேவிபி?: இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்றில் இடதுசாரியான அனுர குமார திசநாயக்க பக்கம் காற்று வீசுவதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவரது இந்திய பயணம் அமைந்திருந்தது. இதனால் இலங்கையின் களநிலவரம், மக்களின் மனநிலை உண்மையிலேயே இடதுசாரிகளை நோக்கி நகருகிறதா? இதனை இந்தியா சரியான தருணத்தில் தமக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறதா? இடதுசாரிகள், சீனாவை விட்டுவிட்டு எப்படி இந்தியா பக்கம் சாய்வார்கள்? என்கிற கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்தியாவில் ஒரு இடதுசாரி தலைமை இருப்பது தமது வெளியுறவுக் கொள்கைக்கும் சீனாவுக்கும் ஒரு சவாலாக இருக்கும் என்பதுதான் இந்தியாவின் எண்ணமோ? என்கிற கேள்வியும் எழுந்தது.
இடதுசாரிகளே இல்லை: இன்னொரு பக்கம், சோ கால்ட் இடதுசாரிகளான ஜேவிபி அனுர குமார திசநாயக்க, தீவிரமான இடதுசாரிகள் இல்லை.. அவர்கள் சோசலிச பாதையில் இருந்து விலகி இயல்பான ஜனநாயக அரசியலில்தான் பயணிக்கின்றனர். இதனை இந்தியா உள்வாங்கிக் கொண்டுதான் அனுர குமார திசநாயக்கவை தம் பக்கம் வளைத்து வைக்கிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இந்தியா மும்முரம்: மேலும் கடந்த காலங்களைப் போல இல்லாமல் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை இந்திய தரப்பு கையாளும் நிலைப்பாடு பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை மீளக் கட்டியெழுப்புகிற ஒன்றாகவே இருக்கிறது; அதனால்தான் மத்திய வெளியுற்வுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணங்களும் அனுர குமார திசநாயக்க நோக்கி பார்வையும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications