Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்: மலையகத் தமிழர் Vs ஈழத் தமிழர் மோதல்- குஷியில் சிங்களர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக 'தமிழ்' பொதுவேட்பாளர் விவகாரத்தில் மலையகத் தமிழர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஈழத் தமிழ் தலைவர்கள் மீது அதிருப்தி வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அதிருப்தியை காட்டும் வகையில் தாமும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக மலையக முன்னாள் எம்பி திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள, ஈழத் தமிழர், மலையக தமிழர் என மூன்று விதமான அரசியல் சக்திகள் உள்ளன. சிங்களரது அரசியல் என்பது தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. ஈழத் தமிழரது அரசியல் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடியது. மலையகத் தமிழர் எனப்படும் இந்திய வம்சாவளித் தமிழர் தென்னிலங்கையின் சிங்கள அரசியலுடன் இணைந்த போக்கைக் கொண்டவர்கள்.

sri lanka presidential election 2024 Sri lanka

ஈழத் தமிழர், மலையகத் தமிழர்: ஈழத் தமிழர்கள், இலங்கையையே பூர்வீகமாக, தாய்நிலமாக, வடக்கு கிழக்கை தாயகப் பிரதேசமாகக் கொண்டவர்கள். மலையக அல்லது இந்தியா வம்சாவளித் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களப் பகுதிகளின் மலைகளில் தேயிலை தோட்டத் தொழிலுக்காக குடியேற்றப்பட்டவர்கள்.

ஈழத் தமிழர் ஆயுதப் போர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனையும் மலையகத் தமிழரின் அரசியல் பிரச்சனையும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. இலங்கை தீவு என்பது சிங்களருக்கு மட்டுமல்ல ஈழத் தமிழருக்கும் உரிமையானது; இலங்கை அரசில் சிங்களருக்கு என்ன உரிமை உள்ளதோ அதே சம உரிமை ஈழத் தமிழருக்கும் உள்ளது; இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதை எதிர்க்கிறோம் என்பது ஈழத் தமிழரின் அரசியல் நிலைப்பாடு. சிங்களத்தின் கை ஓங்கி ஒடுக்குமுறைகள் என்பவை அரச பயங்கரவாதமாக, இனப்படுகொலையாக உச்சம் தொட்டதால் ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி தனிநாடு கோரி யுத்தம் நடத்தினர்.ஈழத் தமிழரின் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டத்தை சிங்களம் தனித்து நின்று அழிக்க முடியவில்லை. சிங்களம், ஈழத் தமிழரிடம் தோற்றுக் கொண்டே போன நிலையில் சர்வதேச நாடுகளின் சதிராட்டங்களுடன் ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தை மவுனிக்க வைத்தது.

மலையகத் தமிழரின் பங்களிப்பு: ஆனால் மலையகத் தமிழரின் அரசியல் பிரச்சனைகள் என்பது வாழ்வதாரம் மற்றும் தென்னிலங்கை சிஙகள் அரசியலுடன் இணைந்த அரசியல் உரிமைகள் தொடர்பானவை மட்டுமே. ஈழத் தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்திலும் கூட மலையகத் தமிழருடன் நட்பு சக்திகளாகத்தானே நின்றனரே தவிர, ஆயுதப் போராட்டத்தின் பங்காளிகளாக கரம் கோர்க்கவில்லை. ஆகையால் எப்போதும் இலங்கையில் ஈழத் தமிழர் அரசியல் வேறானதாகவும் மலையகத் தமிழர் அரசியல் வேறானதாகவுமே இருந்து வந்துள்ளது.

ஈழத் தமிழரின் பொதுவேட்பாளர்: தற்போதைய ஜனாதிபதி தேர்தலிலும் அதே நிலைப்பாடுதான் வெளிப்பட்டு இருக்கிறது. வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 7 அரசியல் கட்சிகள் இணைந்து முன்னாள் எம்பி அரியநேந்திரனை தமிழ் பொதுவேட்பாளராக அறிவித்திருக்கின்றன. ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையுமே ஒன்று கூடி அரியநேந்திரனை பொது வேட்பாளராக முழு வீச்சில் களமிறக்கவும் இல்லை. அங்கேயும் ஏகப்பட்ட 'உள்வீட்டு' குத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மலையகத் தமிழர் அதிருப்தி: இந்த நிலையில் 'தமிழ் பொதுவேட்பாளர்' என்றால் எங்களை ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை என இந்திய வம்சாவளித் தமிழர்கள் தரப்பு கேள்வி கேட்கிறது. மேலோட்டமாக இது நியாயமானதாக தோன்றினாலும் அப்படி மலையகத் தமிழரும் ஈழத் தமிழரும் ஒன்றிணைந்து " இலங்கைத் தமிழர் அரசியலை" முன்னெடுக்கக் கூடிய அரசியல் சூழல் இலங்கையில் இருக்கிறதா? இது சாத்தியமானதா? தென்னிலங்கை சிங்களருடன் இணைந்து வாழும் மலையகத் தமிழருக்கு - இந்திய வம்சாவளித் தமிழருக்கு பாதுகாப்பானதா? என்கிற கேள்விகள் எழாமல் இல்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

இன்னொரு பொதுவேட்பாளர்: அதேநேரத்தில் ஈழத் தமிழர் மட்டும்தான் தமிழரா? நாங்களும் தமிழர்தான்.. நாங்களும் பொதுவேட்பாளரை நிறுத்துவோம் என்ற பெயரில் முன்னாள் எம்பி திலகராஜ் ஜனாதிபதி தேர்தலில் களம் காண்பதாக அறிவித்துள்ளார். உண்மையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு தமிழ் வேட்பாளரும் அந்நாட்டு அரசியலையே புரட்டிப் போட வாக்குகளைப் பெற முடியாது; கடந்த காலங்களில் தென்னிலங்கை சிங்களம் ஒன்று திரண்டு ஒருவரை தேர்வு செய்யும்; வடகிழக்கு ஈழத் தமிழரினம் மற்றொருவரை தேர்வு செய்யும் என்பதுதான் ஜனாதிபதி தேர்தல் கால முடிவுகள். மலையகத் தமிழர்கள் பொதுவாக சிங்களரின் மனப்போக்கில் இணைந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

மகிழ்ச்சியில் சிங்களம்: தற்போதும் சிங்களரின் இந்த மனநிலை மாறிவிட்டதாகவோ இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் களம் மாறிவிட்டதாகவோ நாம் கருதிவிட முடியாது. என்னதான் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் பஞ்சை பராரிகளானாலும் சிங்களப் பேரினவாதம் தமது நச்சரவத்தை கக்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறது. பூர்வீக நிலத்தவரான ஈழத் தமிழரையும் இந்திய வம்சாவளித் தமிழரையும் அரசியல் அதிகாரம் பெற்றுவிட அனுமதிக்கவும் போவதில்லை என்பது "இலங்கை தமிழ்" (ஈழம் பிளஸ் மலையகம்) அரசியல்வாதிகளுக்கு புரியாதது ஒன்றும் அல்ல.. இத்தகைய தமிழர் தரப்பு மீதான இன்னொரு தமிழர் தரப்பு விமர்சனங்கள் "இலங்கை தமிழர்" ஒற்றுமையை ஒருகாலத்திலும் உருவாக்கவே முடியாத நிலையை இறுக்கத்தான் செய்யும்; சிங்களரை மகிழ்விக்கத்தான் செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+