ஜேவிபி அனுர குமார திசநாயக்கவுக்கு பவுத்த பிக்குகள் பேராதரவு? இந்தியாவின் நிலைப்பாடு மாறுகிறதா?
டெல்லி: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா எந்த வேட்பாளரை ஆதரிக்கிறது? என்பது பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் ஜேவிபியின் அனுர குமார திசநாயக்க டெல்லி பயணம் மேற்கொண்டதை முன்வைத்து அவரைத்தான் இந்தியா ஆதரிக்கிறது என்கிற யூகங்கள் இலங்கை அரசியலில் தொடர்ந்து நிலவுகிறது. இந்த நிலையில் அனுர குமார திசநாயக்கவுக்கு சிங்கள பவுத்த பிக்குகள் பெரும் எண்ணிக்கையில் ஆதரவு தந்திருப்பதும் அனுராவின் இடதுசாரி பார்வையால் சீனா பக்கம் சாயக் கூடிய சாத்தியங்கள் இருப்பதும் இந்தியாவின் 'அனுர ஆதரவு' நிலைப்பாட்டை மாற்றக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் அரியநேந்திரன், நாமல் ராஜபக்ச உட்பட 39 பேர் களம் காண்கின்றனர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் முதல் முறையாக போட்டியிட்டுள்ளனர்.

இந்தியா, சீனா: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா, சீனா நாடுகள் நேரடியாக தலையிடாத போதும் மறைமுகமான நிலைப்பாடு எடுப்பது வழக்கமான கொள்கை வியூகம்தான். அந்த வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித்தைவிட அனுர குமார திசநாயக்கவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பல மாதங்களாக உளவுத் துறை தகவல்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றன.
டெல்லி சந்திப்பு: இந்த தகவல்களின் அடிப்படையில்தான் சில மாதங்களுக்கு முன்னர் அனுர குமார திசநாயக்க, டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அனுர குமார திசநாயக்கவுடன் ஆலோசனை நடத்தினார். சிங்களப் பேரினவாத கட்சியான ஜேவியின் அனுர குமார திசநாயக்கவை இந்தியா ஆதரிக்கிறது என்கிற தோற்றமே இந்த சந்திப்பின் மூலமே பரவியது.
சந்தேகத்துக்குரிய அனுர: அனுர குமார திசநாயக்கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவர் இந்தியாவுக்கு நட்பு சக்தியாக இருப்பாரா? என்பது எப்போதும் கேள்விக்குறிதான் என்கின்றன வெளியுறவுத் துறை வட்டாரங்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் இருந்து டெல்லிக்கு வந்துள்ள சில தகவல்கள் இருக்கின்றனவாம். அதாவது அனுர குமார திசநாயக்கவுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே, கோட்டபாய ராஜபக்சேவை ஆதரித்தது போல பவுத்த பிக்குகள் பெரும் எண்ணிக்கையில் ஆதரவைத் தெரிவிக்கின்றனர்; அதேபோல இலங்கை முஸ்லிம்களும் கணிசமான ஆதரவை அனுர பக்கமே காட்டுகின்றனர். அப்படி சிங்கள பவுத்த பேரினவாத முகத்துடன் அனுர குமார திசநாயக்க நிற்கும் போது, இந்தியாவால் அவரை முழுமையாக ஆதரிக்க முடியாது; இயல்பாகவே இடதுசாரியாளரான அனுர குமார திசநாயக்க, சீனா பக்கம் சாய்வதற்குதான் அதிக சாத்தியம் என்பதுதான் கொழும்பில் இருந்து டெல்லிக்கு வந்த தகவல்களாம். இதனையடுத்து வெளிநாட்டுக்கான கொள்கை வகுப்புக் குழுவினரான ரா அதிகாரிகள், இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தீவிரமான விவாதங்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் நெருக்கடி: கடந்த காலங்களில் இலங்கை விவகாரத்தில் இந்தியா காட்டிய போக்கை விட மிகத் தீவிரமான நிலைப்பாடுகளையும் உன்னிப்பான கவனித்தல்களையும் மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியை சீனா உருவாக்கி வைத்துள்ளது; இந்தியா எப்போதும் ஆதரவாக நிற்கக் கூடிய ஈழத் தமிழர்களிடையேயும் சீனாவின் ஊடுருவல் அதிகரித்திருப்பதும் இந்தியாவுக்கு புதிய நெருக்கடியாகும். இதனால்தான் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவும் தீவிரம் காட்டுகிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications