களைகட்டிய செங்கோட்டை!1800 சிறப்பு விருந்தினர்கள்-சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு?
டெல்லி: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வரலாற்றுச சிறப்புமிக்க நினைவுச்சின்னத்தின் கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.
77-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்கள்: செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு தொழில்களைச் சேர்ந்த சுமார் 1,800 பேர் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் அழைக்கப்பட்டுள்ளனர். 'மக்களின் பங்களிப்பு'' என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து தலைவர்கள்: 400 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள்; உழவர் உற்பத்தியாளர் அமைப்புத் திட்டத்தின் 250 பிரதிநிதிகள்; பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் மற்றும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றில் தலா 50 பங்கேற்பாளர்கள்; புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உட்பட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் 50 கட்டுமானத் தொழிலாளர்கள்); 50 கதர் தொழிலாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்புப் பணி, அமிர்த நீர்நிலைகள் மற்றும் இல்லந்தோறும் குடிநீர் திட்டத்தின் செயல்பாட்டாளர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் தலா 50 பேர் உட்பட 660 க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள். இவர்களில் சிலர் டெல்லியில் தங்கியிருப்பதன் ஒரு பகுதியாக தேசிய போர் நினைவுச்சின்னத்தைப் பார்வையிடவும், பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட்டை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலங்களில் இருந்து 75 ஜோடிகள்: செங்கோட்டையில் நடைபெறும் இந்த விழாவைக் காண ஒவ்வொரு மாநில / யூனியன் பிரதேசத்திலிருந்தும் எழுபத்தைந்து (75) ஜோடிகள் தங்கள் பாரம்பரிய உடையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
செல்ஃபி எடுப்பதற்கான இடங்கள்: தேசிய போர் நினைவுச்சின்னம், இந்தியா கேட், விஜய் சௌக், புதுதில்லி ரயில் நிலையம், பிரகதி மைதானம், ராஜ்காட், ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையம், ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையம், தில்லி கேட் மெட்ரோ நிலையம், ஐ.டி.ஓ மெட்ரோ கேட், நௌபத் கானா மற்றும் ஷீஷ் கஞ்ச் குருத்வாரா உள்ளிட்ட 12 இடங்களில் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செல்ஃபி புள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன.
உலகளாவிய நம்பிக்கை: தடுப்பூசி மற்றும் யோகா; உஜ்வாலா திட்டம்; விண்வெளி சக்தி; டிஜிட்டல் இந்தியா; திறன் இந்தியா; ஸ்டார்ட் அப் இந்தியா; தூய்மை இந்தியா; வலிமையான பாரதம்; புதிய இந்தியா; இந்தியாவை வலுப்படுத்துதல்; பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்கள்/ முன்முயற்சிகள் அடங்கும்.
செல்ஃபி போட்டி: ஆகஸ்ட் 15 முதல் 20 வரை மைகவ் வலைப்பக்கத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தால் இணையவழி செல்ஃபி போட்டி நடத்தப்படும். 12 நிறுவல்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் செல்ஃபி எடுத்து மைகவ் தளத்தில் பதிவேற்றம் செய்து போட்டியில் பங்கேற்க மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இணையவழி செல்ஃபி போட்டியின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவலிலிருந்தும் ஒருவர் என பன்னிரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றி பெறுவோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
மின்-அழைப்பிதழ்கள்: அனைத்து அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களும் ஆமந்த்ரன் வலைப்பக்கம் (www.aamantran.mod.gov.in) மூலம் இணையவழியில் அனுப்பப்பட்டுள்ளன. 17,000 மின்-அழைப்பிதழ் அட்டைகள் வலைப்பக்கம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை விழா: செங்கோட்டை வந்தடையும் பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிரிதர் அரமானே ஆகியோர் வரவேற்பார்கள். டெல்லி பகுதியின் ஜெனரல் ஆஃபிசர் கமாண்டிங் லெஃப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்தை பாதுகாப்புத் துறைச் செயலாளர் பிரதமருக்கு அறிமுகப்படுத்துவார். பின்னர் ஜெனரல் ஆஃபிசர் கமாண்டிங் திரு நரேந்திர மோடியை அணிவகுப்புத் தளத்திற்கு அழைத்துச் செல்வார், அங்கு ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் தில்லி காவல் பாதுகாப்புப் படை பிரதமருக்கு மரியாதை வழங்கும். அதன் பிறகு, கௌரவக் காவல்படையை பிரதமர் ஆய்வு செய்வார்.
பிரதமரின் பாதுகாப்பு: பிரதமருக்கான பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப்படை மற்றும் தில்லி காவல்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 25 பணியாளர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 24 பணியாளர்கள் இருப்பார்கள். இந்த ஆண்டு இந்திய ராணுவம் ஒருங்கிணைப்பு சேவையாக உள்ளது. கெளரவக் காவல்படைக்கு மேஜர் விகாஸ் சங்வான் தலைமை தாங்குவார். பிரதமரின் பாதுகாப்புப் படையில் உள்ள ராணுவப் பிரிவை மேஜர் இந்திரஜித் சச்சினும், கடற்படைப் பிரிவை லெஃப்டினன்ட் கமாண்டர் எம்.வி.ராகுல் ராமனும், விமானப் படையை ஸ்குவாட்ரன் லீடர் ஆகாஷ் கங்காஸும் வழிநடத்துவார்கள். தில்லி காவல் படைக்கு கூடுதல் டி.சி.பி சந்தியா சுவாமி தலைமை தாங்குவார். செங்கோட்டையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் அவரை வரவேற்பார்கள். தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்காக டெல்லி பகுதியின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் பிரதமரை மேடைக்கு அழைத்துச் செல்வார்.
ராணுவ மரியாதை: கொடியேற்றப்பட்ட பின்னர், மூவர்ண கொடிக்கு 'ராணுவ மரியாதை' வழங்கப்படும். ஒரு ஜே.சி.ஓ மற்றும் 20 பிற அணிகளைக் கொண்ட ராணுவ இசைக்குழு, தேசியக் கொடியை ஏற்றும்போதும், 'ராணுவ மரியாதை' வழங்கும்போதும் தேசியக் கீதத்தை இசைக்கும். இந்த இசைக்குழுவை நைப் சுபேதார் ஜதீந்தர் சிங் வழிநடத்துவார். மேஜர் நிகிதா நாயர் மற்றும் மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார்கள். இது எலைட் 8711 ஃபீல்ட் பேட்டரி பிரிவின் துணிச்சலான வீரர்களின் 21 குண்டுகள் முழங்க செலுத்தப்படும் (சம்பிரதாயம்) வீர வணக்கத்திற்கு இணையானதாக இருக்கும். சம்பிரதாய முறையை லெஃப்டினன்ட் கர்னல் விகாஸ் குமார் வழிநடத்துவார், துப்பாக்கி நிலை அதிகாரியாக நைப் சுபேதார் (ஏஐஜி) அனூப் சிங் இருப்பார். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் போது ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் தில்லி காவல்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் 128 பிற நிலைகளைக் கொண்ட தேசியக் கொடிக் காவலர் ராணுவ மரியாதையை வழங்குவார்கள். ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் அபினவ் தேதா இந்த சேவைகள் காவலுக்கு தலைமை வகிப்பார்.
விமான படை ஹெலிகாப்டர்கள்: பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியதும், இந்திய விமானப்படையின் மார்க்-3 துருவ் என்ற இரண்டு அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்படும். இந்த ஹெலிகாப்டரின் கேப்டன்களாக விங் கமாண்டர் அம்பர் அகர்வால் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் ஹிமான்ஷு சர்மா ஆகியோர் இருப்பார்கள். மலர் தூவிய பின், நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார். பிரதமரின் உரையின் முடிவில், தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி) தேசிய கீதத்தைப் பாடுவார்கள். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆயிரத்து நூறு(1,100) ஆண் மற்றும் பெண் என்.சி.சி படையினர் (ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) இந்த தேசிய எழுச்சி திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். கியான்பாத்தில் ப்ளீச்சர்கள் நிறுவப்பட்டுள்ளன, அதில் மாணவர்கள் அதிகாரப்பூர்வ வெள்ளை உடையில் அமர்வார்கள். மேலும், சீருடை அணிந்த என்.சி.சி மாணவர்கள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கியான் பாதையில் அமர்வார்கள். செங்கோட்டை மலர் அலங்காரங்களின் ஒரு பகுதியாக ஜி20 சின்னம் இடம்பெற்றிருப்பது, மற்றொரு சிறப்பம்சமாகும்.












Click it and Unblock the Notifications