விசாரணை முடிந்தது.. ஒரு வாரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் திங்கட் கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்தநிலையில் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக்கோரி வைகோ கடும் வாதம் செய்தார்.
இந்தநிலையில், நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. தூத்துக்குடியில் மோசமான நிலைமைக்கு நிலத்தடி நீர் செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு காரணமாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தகவல் அளித்தது. ஆனால், 2014 - 2018 வரை நோட்டீஸ் எதுவும் அனுப்பப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மீண்டும் நூறுகோடி ரூபாய் தருவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டுள்ளது
வாதங்கள் முடிவடைந்ததையடுத்து ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.