விவசாயிகள் போராட்டத்தில் திடீர் வன்முறை.. விவாசியகள் கூடாரங்கள் சேதம்.. கண்ணீர்புகை குண்டு வீச்சு
டெல்லி: டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் தங்கியிருந்த கூடாரத்தில் கற்களை வீசி சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
டெல்லி- ஹரியானா எல்லையிலுள்ள சிங்கு பகுதியில் கடந்த இரண்டு மாதமாக விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கேயே கூடாரங்களை அமைத்து, தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் சிங்கு பகுதியிலுள்ள விவசாயிகள் போராட்ட களத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இன்று மதியம் சுமார் 200 மர்ம நபர்கள் அப்பகுதியில் திரண்டனர். அவர்கள் விவசாயிகள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர்.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். சிங்கு பகுதியில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் எவ்வாறு விவசாயிகளின் போராட்ட களத்திற்குள் நுழைந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
#WATCH: Delhi Police hit a protesting farmer after he attacked a Police personnel, dragging him to the ground along with him. Visuals from Singhu border.
— ANI (@ANI) January 29, 2021
(Note: Abusive language) pic.twitter.com/gILDF9OPA1
சிங்கு எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வன்முறையில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது திடீரென்று வன்முறை ஏற்பட்டது. அப்போது முதலே பதற்றம் அதிகரித்துள்ளது. திக்ரி மற்றும் காஜிபூர் எல்லைகளில் வன்முறைகள் ஏற்படுவதைத் தவிர்க்க அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.