‛ஆண்மகனாக இருங்கள்’.. சாவர்க்கர் போல் கோழையாக இருக்காதீர்கள்.. அமித்ஷாவை ‛டேக்’ செய்து சாடிய ஓவைசி
டெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசியின் டெல்லி இல்லத்தின் மீது கருப்பு மை ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், ‛‛சாவர்க்கர் போல் கோழையாக இருக்காதீங்க. என்னை எதிர்கொள்ள ஆண்மகனாக இருங்க வேண்டும்'' என்று அமித்ஷாவை ‛டேக்' செய்து தெரிவித்துள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, ஹைதராபாத் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் கடந்த 2004, 2009, 2014, 2019 ஆண்டுகளில் வெற்றி பெற்றார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதாவை 3,38,087 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி லோக்சபா கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் எம்பிக்களாக பதவியேற்றனர். அசாதுதீன் ஓவைசியும் எம்பியாக பதவியேற்றார். இந்த வேளையில் அவர் ‛ஜெய் பாலஸ்தீன்' என்று முழங்கினார்.இது சர்ச்சையானது. இந்தியாவில் எம்பியாக தேர்வான நிலையில் இன்னொரு நாட்டுக்கு ஆதரவாக அவர் முழக்கமிட்டதால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது கருப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. அதாவது நேற்று இரவு அவரது வீட்டுக்கு சென்ற மர்மநபர்கள் கருப்பு மையை ஊற்றிவிட்டு சென்றுள்ளனர். அதாவது வீட்டின் முன்புறம் கதவின் அருகே அசாதுதீன் ஓவைசியின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் கருப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் டெல்லி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அசாதுதீன் ஓவைசி தனது பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி போலீசாரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சாவர்க்கர் போன்று கோழைத்தனமான நடந்து கொள்ளாமல் தன்னை ஆண்மகனாக எதிர்க்க வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி தனது வீட்டில் கருப்பு மை படிந்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛சில நபர்கள் இன்று (அதாவது நேற்று) என வீட்டில் கருப்பு மை வீசி நாசப்படுத்தி உள்ளனர். எனது டெல்லி இல்லத்தை எத்தனை முறை குறிவைத்தனர் என்ற எண்ணிக்கையை நான் இப்போது மறந்துவிட்டேன். டெல்லி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் உதவியற்ற நிலையில் இருப்பது தெரிந்தது. அதோடு அமித்ஷாவின் மேற்பார்வையிலேயே இந்த சம்பவம் நடக்கிறது. டெல்லியில் எம்பிக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா? இல்லையா? என்பதை எங்களிடம் கூறுங்கள்.
எனது வீட்டை குறிவைத்த 2 நபர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். இந்த சம்பவம் என்னை பயமுறுத்தவில்லை. சாவர்க்கர் மாதிரி கோழைத்தனமான செயலை நிறுத்துங்கள். என்னை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆண்மகனாக இருங்கள். மை அல்லது கல் வீசியபிறகு ஓடாதீர்கள்'' எனவும் சவால் விடுத்தார்.












Click it and Unblock the Notifications