தெருநாய் கடித்து ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் காயம்! டெல்லி உலக பாரா தடகள போட்டியில் அதிர்ச்சி
டெல்லி: டெல்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க வந்த ஜப்பான் மற்றும் கென்யா நாடுகளின் பயிற்சியாளர்களை தெருநாய்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானம் அருகே இருவரையும் நாய் கடித்துள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தங்கள் ஓட்டல்களுக்கு திரும்பி உள்ளனர்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 104 உலக நாடுகளை சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது ஜவஹர்லால் நேரு மைதானத்திற்குள் கென்யா மற்றும் ஜப்பான் பயிற்சியாளர்களை ஒரு தெருநாய் கடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பயிற்சிப் பாதையில் பயிற்சியை மேற்பார்வையிட்டபோது ஜப்பானிய பயிற்சியாளர் மெய்கோ ஒகுமட்சு மற்றும் கென்ய பயிற்சியாளர் டென்னிஸ் மரகியா ஆகியோரை ஒரு தெருநாய் கடித்ததை அடுத்து, நாய் பிடிப்பவர்கள் அழைக்கப்பட்டனர்.
தெருநாய் கடித்ததில் ஒகுமட்சு மற்றும் மரகியா ஆகியோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தடகள வீரரின் மருத்துவ அறையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் அந்தந்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தெருநாயைப் பிடிக்கவும், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரண்டு நாய் பிடிக்கும் வாகனங்கள் மைதானத்திற்கு விரைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம், குறிப்பாக இதுபோன்ற ஒரு சர்வதேச போட்டியின் போது உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பரவல் அதிகரிப்பு ஏற்படுவது குறித்து ஆகஸ்ட் 11 அன்று, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கவலை தெரிவித்திருந்தது. நாய்களின் அச்சுறுத்தலை சமாளிக்க, தலைநகரம் மற்றும் அதன் புறநகர்களில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக எட்டு வாரங்களில் காப்பகங்களை அமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications