கொலைகார பாகிஸ்தானுக்கு கண்டனம்.. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றம்?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரைக் குடித்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு, மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். பஹல்காம் பள்ளத்தாக்கில் குதிரைகள் மூலம் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து இயற்கையின் பேரழகை கண்டு ரசிப்பர். பஹல்காம்வாசிகளுக்கு வாழ்வாதாரமாக இருப்பதும் இந்த குதிரை சவாரிகள்தான்.

தற்போது பஹல்காம் பள்ளத்தாக்கு, சுற்றுலாப் பயணிகள் இல்லாத வெறிச்சோடிய மயானம் போல காட்சி தருகிறது. இந்த இயற்கையின் பெருங்கொடையான பள்ளத்தாக்கில் கொலைகார பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்த துயரத்தின் சுவடு இன்னமும் இந்த பஹல்காம் நிலத்தைவிட்டு அகலவில்லை.
பாகிஸ்தான் ஏவிவிட்ட இந்த பயங்கரவாதிகளின் கொடுஞ்செயல், ஒட்டுமொத்த உலக நாடுகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்கும் வகையில் மத்திய அரசும் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் திறப்பை நிறுத்தியது மத்திய அரசு; பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாளையும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தானுடனான வாகா- அட்டாரி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் தேடி அழிக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வீடுகளை தரைமட்டமாக்கி வருகிறது ராணுவம்.
பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிகல் ஸ்டிரைக் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நடத்தக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருந்தது. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்திருந்தன.
இதனிடையே நாடாளுமன்றத்தின் சிறர்ப்புக் கூட்டத்தைக் கூட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. 1962-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தத்தின் போது, பிரதமராக இருந்த நேரு, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். இதனைப் பின்பற்றி தற்போதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்கும் தீர்மானத்தை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications