டெல்லி பயிற்சி மையத்தில் 3 பேர் பலியான சம்பவம்.. நீதி கேட்டு தொடர்ந்து போராடும் மாணவர்கள்
டெல்லி: டெல்லி பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்ததில், 2 மாணவிகள் ஒரு மாணவர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பயிற்சி மையத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஏராளமான ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு டெல்லியில் பழைய ராஜிந்தர் நகரில் ராவ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள் என்ற பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் விதிகளுக்கு மாறாக நூலகம் செயல்பட்டு வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை, அதன் தரைத்தளத்துக்கு கீழே உள்ள அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் பயிற்சி மாணவர்கள் சிலர் இருந்தனர். அப்போது, பலத்த மழை பெய்த நிலையில் மழை நீர் வடிகால் வழியாக மழைநீர் செல்ல வழி இல்லாமல், அடித்தளத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதில், தண்ணீரில் மூழ்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (வயது 25), தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி (25) ஆகிய 2 மாணவிகளும், கேரளாவை சேர்ந்த நவீன் தால்வின் (28) என்ற மாணவரும் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள், நேற்று முன்தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதே சமயத்தில், மாநகராட்சியும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட ராவ் பயிற்சி மையத்துக்கு சீல் வைத்ததுபோல் மேலும் 13 பயிற்சி மையங்களுக்கும் 'சீல்' வைத்தது.
வடக்கு டெல்லியின் முகர்ஜி நகரிலும், அடித்தளத்தில் செயல்படும் மையங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. மாணவர்கள் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்கு அருகே நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
அவர்களை டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனா நேரில் சந்தித்து பேசினார். 'நீதி வேண்டும், நீதி வேண்டும்' என்று மாணவர்கள் கோஷமிட்டனர். தவறு செய்தவர்களை தப்பிக்க விட மாட்டோம் என்று கவர்னர் உறுதி அளித்தார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பயிற்சி மையத்திற்கு வெளியே இரவிலும் முகாமிட்டுள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications