அப்பாவியாக கேட்கிறேன்.. ஆசிய கோப்பையில் கிரிக்கெட் “சூதாட்டமா”? - சுப்ரமணியன் சாமி ட்வீட்டால் பரபர
டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார் என்றும், அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றதா எனவும் பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
“அதிசயம்” நடக்கலாம்! ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு “கடைசி சான்ஸ்”! எல்லாம் ஆப்கானிஸ்தான் கையில்
இந்திய அணி
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. செவ்வாய்கிழமை இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் VS ஆப்கானிஸ்தான்
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவதற்கு நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
வெளியேறிய இந்தியா
இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது. கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. குறிப்பாக விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தது. இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன.
சுப்ரமணியன் சாமி ட்வீட்
இந்திய ஆணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறதற்கு பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சாமி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.