வைகோ, நிர்மலா சீதாராமன்..... சு.சுவாமியின் இன்றைய டார்கெட்!
Recommended Video
டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இவற்றை வைத்து ட்விட்டரில் அக்கப்போர் நடத்திக் கொண்டிருக்கிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.
மத்திய பாஜக அரசில் எப்படியாவது நிதி அமைச்சராக வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் விருப்பம். கடந்த 5 ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்த அருண்ஜேட்லிக்கு குடைச்சல் கொடுத்து வந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
லோக்சபா தேர்தலில் பாஜக வென்று மீண்டும் ஆட்சி அமைந்ததும் சுப்பிரமணியன் சுவாமி அமைச்சர் கனவில் மிதக்க தொடங்கினார். சமூக வலைதளங்களில் தமது ஆதரவாளர்கள் மூலம் நிதி அமைச்சர் பதவி அவருக்குத்தான் கிடைக்கும் என பதிவிட வைத்து அதை ரீ ட்வீட் செய்து வந்தார்.

நிதி அமைச்சர் பதவி கனவு
ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமியை பாஜக மேலிடம் ஏறெடுத்தும் பார்க்காமல் நிர்மலா சீதாராமனை நிதி அமைச்சராக அறிவித்தது. இதில் மிகவும் கடுப்பாகிப் போன சுப்பிரமணியன் சுவாமி வழக்கம் போல நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் பதிவுகளை அவ்வப்போது போட்டு வந்தார்.

பட்ஜெட் குறித்து ட்வீட்டுகள்
இன்று மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் ஒட்டுமொத்த பாஜகவினரும் நல்ல பட்ஜெட் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சுப்பிரமணியன் சுவாமி பட்ஜெட்டில் எந்த பத்திகளில் முரண்பாடுகள் இருக்கின்றன என அலசி ஆராய்ந்து ஒவ்வொரு பதிவாக போட்டு வருகிறார்.

வைகோ-சுவாமி மோதல்
அதேபோல வைகோ ராஜ்யசபாவுக்கு வருவதை விரும்பாதவர் சுப்பிரமணியன் சுவாமி. ஏனெனில் ராஜ்யசபாவில் சுப்பிரமணியன் சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார் வைகோ என்கிற வரலாறும் உண்டு. இதற்காக ராஜ்யசபாவிலே பஞ்சாயத்தை கூட்டியவர் சுப்பிரமணியன் சுவாமி.

சுவாமியின் ட்வீட்டுகள்
இன்று தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான செய்தி லிங்குகளையும் இடைவிடாமல் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications