ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதிக்கு எதிரான தமிழ்நாடு அரசு அப்பீல் மனு- விசாரணை நவ.6-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழ்நாட்டில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்த அனுமதி கோரி இருந்தது. தமிழ்நாடு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பேரணி நடத்த அனுமதி அளித்தது.

ஆனால் இந்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது ஏன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்? தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினால் டிவிஷன் பெஞ்ச்சில் முறையீடு செய்யலமே? இந்த வழக்கின் ரோஸ்டர் அட்டவணை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இவ்வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications