நபிகள் நாயகம் வழக்கு: நுபுர் ஷர்மாவுக்கு ஆறுதல்.. உச்சநீதிமன்றம் அனுமதி! அப்போ அந்த வழக்குகள் நிலை?
டெல்லி: நபிகள் நாயகம் மீது தெரிவித்த சர்ச்சை கருத்துக்களுக்காக நுபுர் ஷர்மா மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்குகளை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அனுமதி அளித்து உள்ளது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, சில மாதங்கள் முன் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
ஒரே நாளில் ஒரே இடத்திற்கு வரும் 3 'பெரும் தலை’கள்.. பெரிய சம்பவம் நடக்குமா? - தகிக்கும் அதிமுக!
வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா உட்பட 9 இடங்களில் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்ய தடை
நுபுர் ஷர்மாவுக்கு சமூக வலைதளங்களில் பலர் கொலை மிரட்டல் விடுப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரினார். இதனை அடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தன்னை கைது செய்யக்கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை வழக்கை அவரை கைது செய்ய தடை விதித்தது.
நுபுர் ஷர்மாவுக்கு அனுமதி
இந்த நிலையில், நுபுர் ஷர்மாவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடைகாலம் இன்றுடன் நிறைவடைவதை தொடர்ந்து அவரது வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்களுக்காக நுபுர் ஷர்மா மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றியது. இந்த வழக்குகளை ரத்து செய்திடக்கோரி நுபுர் ஷர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.