அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்- செல்லாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு அளித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்கே மிஸ்ராவுக்கு மத்திய பாஜக அரசு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் மிஸ்ராவின் (சஞ்சய் குமார் மிஸ்ரா) (எஸ்கே மிஸ்ரா) (மிஸ்ரா) பதவி காலம் முடிவடைந்த பின்னர் 3 முறை மத்திய பாஜக அரசு பணி நீட்டிப்பு வழங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது முறையாக சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜெயா தாக்கூர், திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.ஆர்.கவாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது. 2021-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் வரும் ஜூலை 31-ந் தேதி வரை மட்டும்தான் எஸ்கே மிஸ்ரா பதவியில் இருக்க வேண்டும். அதற்கு பின் அந்தப் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது என அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இது மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
2018-ம் ஆண்டு முதன் முதலில் மத்திய அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்கே மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. அப்போது அவருக்கு வயது 60. ஆனால் 2020-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக் காலத்தை குறுகிய காலம் மட்டும்தான் நீட்டிக்க வேண்டும். சஞ்சய்குமார் மிஸ்ரா (எஸ்கே மிஸ்ரா) பதவிக் காலத்தை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என தெளிவான தீர்ப்பு தந்தது. ஆனாலும் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் எஸ்கே மிஸ்ராவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு கொடுத்தது உச்சநீதிமன்றம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அதிருப்தி அடைய செய்தது.
சஞ்சய் மிஸ்ரா வழக்கில் கடந்த மே மாதம் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையில் சஞ்சய் மிஸ்ராவைத் தவிர வேறு யாருமே அந்தப் பணியை செய்ய தகுதியே இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது சஞ்சய்குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications