சந்திரபாபு நாயுடு வழக்கு- உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு- 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
டெல்லி: ஊழல் வழக்கில் தம் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்த போது திறன் மேம்பாட்டு நிதியில் ரூ371 கோடி மோசடி நடந்தது என்பது வழக்கு. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் தம் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் இம்மனுவை ஆந்திரா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
இதனையடுத்து ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெல்லா திரிவேதி ஆகியோர் விசாரித்தனர். இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இருவரும் இன்று இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications