நீட் பிஜி கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்த வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: நீட் பிஜி கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்து எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்தி வருகிறது. பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் இளநிலை தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப் பெர்சண்டைல்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் 0 எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் 0 அதாவது பூஜ்ஜியம் மதிப்பேண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முது நிலை நீட் கட் ஆஃப் பூஜ்ஜியம் ஆக குறைக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனிடையே, நீட் பிஜி கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி மனோஜ் மிஸ்ரா, நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையிலும் அவசர மனுவாக விசாரிக்க மனுதாரர் தெரிவித்தார். அப்போது, மனுதாரரிடம் நீங்கள் மாணவர் இல்லை என்பதால் இதனால் எந்த வகையில் உங்களுக்கு பாதிப்பு என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications