ஹஜ் பயணத்துக்கு 5% ஜிஎஸ்டி.. விலக்கு கோரி தனியார் பயண நிறுவனங்கள் வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி: தனியார் பயண நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ் புனித யாத்திரைக்காக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு செல்கின்றனர்.
அதேபோல் உம்ரா எனப்படும் புனித பயணத்தை ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம்.
களைகட்டிய ஹஜ் பயணம்.. 2 ஆண்டுக்கு பிறகு அராபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை
ஹஜ் பயணம்
இந்தியர்கள் ஹஜ் பயணத்தை இந்திய ஹஜ் கமிட்டி மற்றும் தனியார் பயண நிறுவனங்கள் மூலமாக செய்து வருகின்றனர். உம்ரா பயணத்தை தனியார் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்கின்றனர். இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக செய்யப்படும் ஹஜ் பயணத்தை காட்டிலும் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாக செய்யப்படும் ஹஜ் பயணங்களுக்கு பன்மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
5 சதவீதம் ஜிஎஸ்டி
இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் ஹஜ் பயணங்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரியை மத்திய நிதி அமைச்சகம் விதித்து உள்ளது. இதனை எதிர்த்து தனியார் ஹஜ் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கின்றன. அதில், அரசியலமைப்பு சட்டம் 245 இன் கீழ் எல்லை தாண்டிய சேவைகளுக்கு வரிவிதிப்பு சட்டம் பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வெளியில் சேவை
இந்தியாவுக்கு வெளியே செய்யப்படும் ஹஜ் சேவைகள் ஜிஎஸ்டிக்கு வராது எனவும், இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து வரி விலக்கு அளிக்கப்படும் நிலையில், தனியார் ஹஜ் நிறுவன சேவைகளுக்கு மட்டும் வரி விதிப்பது பாரபட்சமானது எனவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வழக்கு தள்ளுபடி
இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவுக்கு வெளியே வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக மற்றும் ஒரு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. என்று கூறி தனியார் பயண ஏற்பட்டாளர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உள்ளது.