மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்! காரணம் இதுதான்
டெல்லி: நாட்டில் நிலவும் மூட நம்பிக்கைகள் அவ்வப்போது உயிரிழப்பு, பண பறிப்பு சம்பவங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
பில்லி சூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவே மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மட்டுமல்லாது மனுதாரர், மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கூறிய நீதிபதிகள், “இது என்ன வகையான பொதுநல வழக்கு? நீதிமன்றம் எப்படி இந்த வகையான பொதுநல வழக்குகள் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? மூடநம்பிக்கைகளை நாம் எப்படி ஒழிக்க முடியும்?
நாட்டில் நிலவும் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது.(Scientific Temper) அறிவுப்பூர்வமான சிந்தனையை வளர்க்க கல்வி மிக அவசியம், கல்வி அறிவு பெற்ற ஒருவர் இயல்பாகவே மூடநம்பிக்கைகளுக்குள் செல்லமாட்டார். நீதிமன்ற மனுக்கள் மூலம் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்காது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நரேந்திர தபோல்கர் கொலை: உலகம் முழுவதும் மதம், மூடநம்பிக்கை, சாதி பாகுபாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் குறி வைத்து கொல்லப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த புகார்களை மெய்ப்பிக்கும் வகையில் நடந்ததுதான் தபோல்கர் கொலை. கோவிந்த் பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் என அடுத்தடுத்து நடந்த கொலைகளுக்கு தொடக்க புள்ளியாக தபோல்கர் கொலை சம்பவம் இருந்தது.
மகாராஷ்டிராவில் பிறந்த தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவராவார். 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றிய இவரை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நோக்கி அம்மாநில அரசியல் நகர்த்தியது. பாஜகவும், சிவசேனாவும் நிரம்பி வழிந்த மராட்டியத்தில் ஏராளமான சாதிய, மத பாகுபாடுகள் தலை தூக்கியிருந்தன. எனவே இவர் மருத்துவ பணியை கைவிட்டுவிட்டு இவற்றை ஒழிக்கும் பணியில் இறங்கினார்.
குறிப்பாக ஒரு கிராமத்தில் ஒரு கிணறுதான் இருக்க வேண்டும், அது பொது கிணறாகதான் இருக்க வேண்டும் என்று இவர் வைத்த முழக்கம் மகாராஷ்டிராவில் பரவலாக எதிரொலித்தது. தனது போராட்டத்தில் உறுதியாக இருந்த தபோல்கர், 1989ம் ஆண்டு 'மூடநம்பிக்கை எதிர்ப்பு' இயக்கத்தை தொடங்கினார். இவருக்கும், பாலியல் வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவின் குழுவினருக்கும் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.
தவிர பல இந்துத்துவ, வலதுசாரி குழுக்களும் இவருடன் அடிக்கடி பஞ்சாயத்து செய்து வந்ததன. இப்படி இருக்கையில், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அவர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications