வெறுப்பு பேச்சு வழக்கு.. அண்ணாமலைக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஹேப்பி நியூஸ்- விசாரணை தடை நீட்டிப்பு!
டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வெறுப்பு பேச்சு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், இந்து மத பண்டிகையான தீபாவளியை அழிக்கவே பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என கூறியிருந்தார். அத்துடன் நிற்காமல், தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க கோரி கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதலிலேயே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூஷ் மனுஷ் கோரியிருந்தார். இவ்வழக்கில் அண்ணாமலை ஆஜராக சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால் இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். அதில், என் பேட்டியால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என் பேச்சின் உள்ளடக்கம் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் சேலம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அண்ணாமலையின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலையின் பேச்சையும் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது 6 வாரங்களில் புகார் மனுதாரர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் செப்டம்பர் 9-ந் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கான இடைக்கால தடை தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications