மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. 12 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட் தடை.. என்ன நடந்தது?
டெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மகாராஷ்டிரா அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் ரயில்களில் 7 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 189 பேர் உயிரிழந்ததோடு, 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு படை விசாரணை நடத்தி வந்தது. இதில் கைதான 12 பேரும் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர் ஏ தொய்பா அமைப்புடன் இணைந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகள் விசாரணைக்குப் பின், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதில் 12 பேரில் கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஸ்தேஷாம் சித்திக், நவீத் கான், பஷீர் கான் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனையும், 7 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் வழங்கியது. இதன்பின் 12 பேரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதற்கு மகாராஷ்டிரா அரசு தரப்பில், 12 பேருக்கும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றம் அளித்த 671 பக்க தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. தவறான ஆதாரங்களைச் சமர்ப்பித்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளியாக சித்தரித்து நீதி பெற்றுத் தருவதைப் போல் மாயை ஏற்படுத்தினால், மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை இருக்காது.
உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். ரயில் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் வகை பற்றி தகவல் கூட விசாரணை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று நீதிமன்றம் கூறி இருந்தது. இது மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications