"என்ன சட்டம் இது.. உடனே மாற்றுங்கள்!" மத்திய அரசு வழக்கறிஞரை பார்த்து உச்ச நீதிமன்றம் சொன்ன வார்த்தை
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமியின் 31 வாரக் கருவைக் கலைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைக் கடுமையாகச் சாடியுள்ளது. பெண்ணின் உடல் மீதான அவளது உரிமையை நிலைநாட்டும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்துக்களை உச்ச நீதிமன்றம் இன்று வழக்கு விசாரணையின்போது தெரிவித்து..
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்த 15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முதலில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அந்த சிறுமியின் தாயார் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கருவைக் கலைக்க அனுமதி அளித்தது.

வழக்கு
இருப்பினும், அந்த சிறுமி 31 வாரக் கர்ப்பமாக இருந்ததால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு மத்திய அரசைக் கடுமையாகச் சாடியது. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும் என நீதிமன்றம் மிகத் தெளிவாக வலியுறுத்தியது.
சட்டத்தை மாற்றலாம்
தற்போதுள்ள சட்டப்படி 24 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்வது சிக்கலாக உள்ள நிலையில், நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்தது.. மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான கர்ப்பகால வரம்புகளை நிர்ணயிக்கும் தற்போதைய சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு யோசனை கூறியது. நீதிபதிகள் மேலும், "பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் ஏற்படும்போது, எந்த கால வரம்பும் இருக்கக் கூடாது. சட்டம் கால மாற்றத்திற்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும்" என்று நீதிமன்றம் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது.
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "இந்தக் கட்டத்தில் கருக்கலைப்பு சாத்தியமில்லை; குழந்தையைப் பெற்றெடுத்துத் தத்து கொடுப்பதே ஒரே வழி" என்று வாதிட்டார். இதைக் கேட்டவுடன் கோபமடைந்த நீதிபதிகள், சில காட்டமான கருத்துகளைக் கூறினர்.
கோபமடைந்த நீதிபதி
சொலிசிட்டர் ஜெனரலை நோக்கி நீதிபதிகள், "இது ஒரு குழந்தை தொடர்பான வழக்கு... பாதிக்கப்படும் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் வடுவும், அதிர்ச்சியும் இருக்கும். பிற்காலத்தில் அவளுக்குத் திருமண வாழ்க்கை சிக்கலானதாகப் போனாலும், இந்த வலி பெரியதா அல்லது அது பெரியதா? ஒரு குழந்தைக்கும் அவளது கருவுக்கும் இடையே போராட்டம் என்றால், அந்தக் குழந்தைக்குக் கண்ணியத்துடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார்.
அப்போது, "குழந்தையைப் பெற்றெடுத்துத் தத்து கொடுப்பது அந்தக் குழந்தையின் நலனுக்கு ஏற்றது.. இன்னும் நான்கு வாரங்களே உள்ளன" என்று கூறினார். இதைக் கேட்டவுடன் கோபமடைந்த நீதிபதி, "நமது எய்ம்ஸ் மருத்துவமனையில் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அந்தக் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு நிமிடமும் கருவைச் சுமக்கும் அந்தக் குழந்தையின் மனதில் ஏற்படும் வேதனையின் அளவைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! ஒரு வயது வந்த பெண்ணாக இருந்தால் விஷயங்கள் வேறு விதமாக இருந்திருக்கலாம், ஆனால் இது 15 வயதுக் குழந்தையின் தேவையற்ற கர்ப்பம்.
அரசு தலையிடக்கூடாது
இந்த வயதில் அவளுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் இருக்கும்; ஆனால் நாம் அவளை ஒரு அம்மாவாக்க விரும்புகிறோமா?" தனிநபர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுங்கள். கருவைக் கலைப்பதா வேண்டாமா என்பதைப் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது குடும்பமும்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அரசு தலையிட இடமில்லை ஒவ்வொரு நிமிடமும் அந்தக் கருவைச் சுமப்பது அந்தச் சிறுமிக்கு எவ்வளவு பெரிய வேதனை என்பதை எண்ணிப் பாருங்கள்" என்றார்.
முன்னதாக கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர், சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்தனர். அந்தச் சிறுமி ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதை நீதிமன்றம் வேதனையுடன் குறிப்பிட்டது. சிறுமியைக் கட்டாயப்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்க வைப்பது, அவர் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் நீதிமன்றம் விளக்கியது.












Click it and Unblock the Notifications