அரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
டெல்லி: அரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவது தேசத்துரோகம் கிடையாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு எதிரான பொதுநல வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலம், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல பிரிவினைவாத தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு பிறகு ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானின் உதவியை நாடினார் என்று உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பரூக் அப்துல்லா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் பரூக் அப்துல்லாவுக்கு எதிரான பொதுநல வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ .50,000 அபராதமும் விதித்தனர். அரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவது தேசத்துரோகம் கிடையது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.