அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
டெல்லி: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2011 -15-ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. பின்னர் திமுகவில் இணைந்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீது ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் மொத்தம் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம்
இந்நிலையில் பண மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை சம்மன் ரத்து
அமலாக்கத்துறையின் இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ராஜா விசாரித்தார். இந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் ஏற்கனவே விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதேநேரத்தில் அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகையால் அமலாக்கப் பிரிவின் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ராஜா, செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கப் பிரிவின் சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ்
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, பண மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான திருவண்ணாமலை பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து திருவண்ணாமலை பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க செந்தில் பாலாஜிக்கும் அமலாக்கத்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications