ஓயாத வன்முறை: மணிப்பூர் செல்லும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.. பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
டெல்லி: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சுந்தரேஷ், சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன், விக்ரம்நாத், கோடீஸ்வர் சிங் ஆகிய 6 பேர் குழுவினர் மணிப்பூர் செல்கின்றனர்.
அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக உறுதி அளிக்க உள்ளனர்.

மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மெய்த்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் மாற்று இனத்தவரின் குடியிருப்புகளில் தீ வைத்து எரிக்கும் சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில் பலர் பலியாகினர். இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்து வந்த பிரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மணிப்பூர் கலவரத்திற்கு பிரேன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், அவர் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக அழுத்தம் அதிகரித்ததால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பி.ஆர்.கவாய் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் வருகிற 22 ஆம் தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவையொட்டி உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வரும் 22 ஆம் தேதி மணிப்பூருக்கு செல்கிறார்கள்.
இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள். நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications