இந்த சமூகம்- ஜாதின்னா குற்றவாளிதான்..போலீஸ் 'நடைமுறையை' மாற்ற மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: சமூகம், ஜாதி, மற்றும் பொருளாதார பின்னணியின் அடிப்படையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் (History Sheeter) (சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்) பட்டியலில் சேர்க்கும் நடைமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனதுல்லா கான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் அமனதுல்லா கான், குற்றப் பின்னணி கொண்டவராக காவல்துறையால் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிராக அமனதுல்லா கான் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமனதுல்லா கான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், என் மனைவி மற்றும் குழந்தைகளையும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக காவல்துறை சேர்த்திருக்கிறது. இதனை ரத்து செய்யவும் கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அல்லது குற்றப் பின்னணி கொண்டவர் என்கிற விவரங்கள் அனைத்தும் காவல்துறையின் ஆவண விவரங்கள். இதை பொதுவெளிக்கு கொண்டுவர வேண்டியதும் இல்லை. எந்த ஒரு ஆதாரமுமே இல்லாமல் குற்றவாளிகளின் குழந்தைகள் உள்ளிட்டோரை இத்தகைய குற்றப் பின்னணி கொண்டவர் பட்டியலில் சேர்க்கவும் கூடாது.
சமூகம், ஜாதி மற்றும் பொருளாதார அடிப்படையில் - கல்வியில் பின் தங்கியவர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்பட்ட ஜாதியினர்- எஸ்சி, எஸ்டி ஜாதியினர் என்பதற்காகவும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என பட்டியலில் சேர்க்கும் நடைமுறைகளில் உரிய மாற்றங்களையும் திருத்தங்களையும் கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் நகலை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications