தீபாவளி பண்டிகையை ஒட்டி டெல்லியில் 4 நாட்கள் பட்டாசு வெடிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் அனுமதி!
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை காலை 6 முதல் 7 வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், வெளிப்பகுதியில் இருந்து டெல்லிக்கு பட்டாசுகள் கொண்டுவர அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லியில் தீபாவளி திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளின்போது பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின்போது இந்த விதிமுறைகள் பொருந்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். புதிய விதிமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். சிறுவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. பட்டாசு தடை காரணமாக தீபாவளி பண்டிகை நாட்களில் காற்று மாசு குறைந்து காணப்படுகிறது என்றும் எனவே மீண்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 18 முதல் 21 ஆம் தேதி வரை காலை 6 முதல் 7 வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், வெளிப்பகுதியில் இருந்து டெல்லிக்கு பட்டாசுகள் கொண்டுவர அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications