"ஆடு, கோழிகளுக்கு எல்லாம் உயிர் இல்லையா?" நாய் ஆர்வலர்களிடம் உச்ச நீதிமன்றம் கேட்ட அதிரடி கேள்வி
டெல்லி: தெருநாய்கள் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் நீதிமன்றத்தில் பல காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் நீதிபதிகள் நாய்களைப் பிடிப்பதற்கு எதிராக ஆஜரானவர்களைப் பார்த்து, "மற்ற விலங்குகளின் வாழ்வு பற்றி கவலை இல்லையா? கோழிகள் மற்றும் ஆடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவைகளுக்கு உயிர் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.
தெருக்களில் சுற்றும் நாய்களைப் பிடிப்பது தொடர்பான வழக்கு கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. முதலில் டெல்லி- என்சிஆர் பகுதியில் சுற்றும் அனைத்து நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பின்னர் மேல்முறையீட்டில் ஆவேசமாக இருக்கும் நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று அவை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, தெரு நாய்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 90 வயது முதியவரின் போட்டோவை மனுதாரர் காட்ட முயன்றார். "தெரு நாய்கள் தாக்கினால் இப்படித்தான் நடக்கும்" எனச் சொல்லி போட்டோவை காட்ட முயன்றார். இருப்பினும், அவரை நிறுத்திய நீதிபதிகள், "போட்டோக்களை காட்ட வேண்டியதில்லை" என்றனர்.
மக்கள் பாதிப்பு
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும், "தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சர்வதேச நடைமுறைகளை நாமும் பின்பற்றலாம். ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் டிராம்பாக்ஸ் எனப்படும் கருணைக் கொலை மையங்கள் உள்ளன. கைவிடப்பட்ட நாய்கள் அங்கு அழைத்துச் செல்லப்படும். குறிப்பிட்ட நாட்கள் தங்க வைக்கப்படும். யாரும் அந்த நாய்களைத் தத்தெடுக்கவில்லை என்றால் அவை கருணைக் கொலை செய்யப்படுகின்றன. ஜப்பானில் தெரு நாய் பிரச்சினை இல்லாததற்கு இதுவே காரணம்.. 1950ஆம் ஆண்டு முதல் அங்கு வெறிநாய்க்கடி மரணங்கள் இல்லை" என்றார்.
சரியாக இருக்காது
விலங்கு நல ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, "அனைத்துத் தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைப்பது சரியான நடைமுறையாக இருக்காது. நாய்கள் மறைந்துவிட்டால் குரங்குகள் பிரச்சினை கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு அதிகரித்துவிடும். அப்போது பற்றி என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு நொய்டாவில் தெரு நாய்களால் தாக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் தந்தையும் நீதிமன்றத்தில் ஆஜரானார். தெரு நாய் பிரச்சினை குறித்து பலமுறை புகாரளித்தும் நொய்டா ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். குடியிருப்பு நலச் சங்கங்கள் தங்கள் பகுதிகளை நாய் இல்லாத மண்டலங்களாக அறிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
கோழி, ஆடுகளுக்கு வாழ்க்கை இல்லையா?
நாய்களைப் பிடிப்பதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி இருந்தார். அப்போது அவர், "நாங்கள் நாய்களை நேசிக்கிறோம்.. சுற்றுச்சூழலை நேசிப்பவர்கள்" என்று சொல்லி வாதத்தை ஆரம்பித்தார் அப்போது நீதிபதிகள், "மற்ற விலங்குகளின் வாழ்வு பற்றி கவலை இல்லையா? கோழிகள் மற்றும் ஆடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவைகளுக்கு உயிர் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கபில் சிபல், "கோழிகள் மிகவும் கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைக்கப்படுவதால் நான் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்" என்று பதிலளித்தார். மேலும் அவர், "ஒரு புலி மனிதனை வேட்டையாடுகிறது என்பதற்காக அனைத்துப் புலிகளும் மனிதனை வேட்டையாடும் புலிகள் என்று கருதிக் கொல்லப்பட வேண்டியதில்லை" என்றார். மேலும், உலகில் எந்தெந்த நாடுகளில் தெருநாய் பிரச்சனையைச் சமாளிக்க CSVR எனப்படும் நாய்களைப் பிடித்து கருத்தடை & தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே இடத்தில் விடும் முறை இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டார். இதன் மூலம் நகரங்களில் நாய் பிரச்சினையை ஒழிக்க முடியும் என்றும் வாதிட்டார்.
பிரச்சினை அதிகரிக்கும்
அவர் மேலும், "இந்தியா போன்ற நாடுகளில் பொது இடங்களில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. தெரு நாய்களை அகற்றுவது பிரச்சினையை அதிகரிக்கவே செய்யும். மேலும், எல்லா நாய்களையும் முகாம்களில் அடைத்தால் நகராட்சிக்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் . நாய்களுக்குக் கருத்தடை செய்வதை நகராட்சிகள் தவறிவிட்டதே பிரச்சினைக்குக் காரணம்" என்றார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், "உண்மையான நாய்க்கடி சம்பவங்களை விட இவர்கள் ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகமாக நாய்க்கடி சம்பவம் நடந்துள்ளதாக டேட்டாவில் காட்டியுள்ளனர். ஏனென்றால் பொதுவாக நாய்க்கடிக்கு 5 ஊசிகள் வரை போடப்படும். ஒவ்வொரு தடுப்பூசியும் தனித்தனி நாய்க் கடி வழக்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2021 முதல் 19 மாநிலங்களில் ரேபீஸ் வழக்குகளே இல்லை. அச்சத்தால் அவசரப்பட்டு முடிவெடுத்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்" என்றார்.
நீதிபதி கருத்து
அப்போது நீதிபதிகள், "நாங்கள் ஏற்கனவே உத்தரவை மாற்றி அமைத்துள்ளோம். இப்போது கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே நாய்கள் இருக்கக்கூடாது எனச் சொல்லியுள்ளோம். சாலைகளில் இருக்கும் நாய்களுக்கு இல்லை. பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது நீதிமன்றங்களுக்குள் தெரு நாய்கள் ஏன் தேவை? அதை அகற்றுவதில் என்ன பிரச்சினை" எனக் கேள்வி எழுப்பினார்.
இப்படி இன்றைய தினம் முழுக்க காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை மீண்டும் நாளை காலை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications