பீகார் 65% இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாட்னா ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 65% இடஒதுக்கீடு வழங்க வகை செய்த சட்டம் செல்லாது என பாட்னா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
பீகார் மாநில அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஜாதி ரீதியான விவரங்களை பகிரங்கப்படுத்தியது. இதன் அடிப்படையில்,

பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 50% இடஒதுக்கீட்டை 65% ஆகவும் உயர்த்தி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் 30% (ஈபிசி - 18%; ஓபிசி - 12 %), தாழ்த்தப்பட்டோர் 16%; பழங்குடிகள் 1%; பிற்படுத்தப்பட்ட பெண்கள் 3% என மொத்தம் 50% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இதனை பிற்படுத்தப்பட்டோர் 43%; தாழ்த்தப்பட்டோர் 20%; பழங்குடிகள் 2% என மொத்தம் 65% ஆக அதிகரித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. பீகார் மாநில சட்டசபையில் கடந்த ஆண்டு இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்துக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், பீகார் அரசின் 65% இடஒதுக்கீடு உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக பீகார் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.












Click it and Unblock the Notifications