ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஹேமந்த் சோரன் ஜாமீன் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவுகளைத்தான் பிறப்பித்துள்ளது என கூறி அமலாக்கத்துறையின் மனுவை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம்.
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வின் செயல் தலைவர். ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் அமலாக்கத்துறையும் இணைந்து ஹேமந்த் சோரன் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சாம்பாய் சோரன் இடைக்கால முதல்வரானார்.

இதனிடையே ஹேமந்த் சோரன் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஹேமந்த் சோரன் மீதான வழக்குக்கு முகாந்திரமே இல்லை என கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். ஜார்க்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்தார். ஆனால் அமலாக்கத்துறையோ ஹேமந்த் சோரனின் ஜாமீன் விடுதலையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை இன்று விசாரித்தது உச்சநீதிமன்றம். அப்போது ஹேமந்த் சோரன் வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவையே பிறப்பித்துள்ளது என கூறி அமலாக்கத்துறையின் மனுவை டிஸ்மிஸ் செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஹேமந்த் சோரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு இது பெரும் பின்னடைவாகும்.












Click it and Unblock the Notifications