"தெருநாய்களை பொது இடங்களில் விடக்கூடாது.." திட்டவட்டமாக சொன்ன உச்ச நீதிமன்றம்! அதிரடி உத்தரவு
டெல்லி: இந்தியாவில் நாய்க்கடி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. இதற்கிடையே பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விட தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை மற்றும் அவற்றின் கடிக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. கண்கூடான கொடூரமான உண்மைகளுக்கு முன்னால் நீதிமன்றம் தன் கண்களை மூடிக்கொண்டு குருடனாக இருக்க முடியாது என்று கூறி, கடந்த 2025 நவம்பரில் தான் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றம்
கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்து தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பொதுவாக விலங்கு நல வாரிய அமைப்புகள் நாய்களை ஒரு இடத்தில் பிடித்தால் அதற்குத் தடுப்பூசி போட்டு, கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட்டுவிடுவார்கள். ஆனால், மேலே கூறப்பட்ட இந்த இடங்களில் பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே இடத்தில் விட உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதிக மக்கள் நடமாட்டம் இருப்பதால் இந்த இடங்களில் தெருநாய்களை மீண்டும் விடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியது.
தள்ளுபடி
இதற்கு எதிராகத் தான் பல்வேறு அமைப்புகள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. அந்த வழக்குகளில் தான் இப்போது 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாய்களுக்குக் கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டாலும், அவற்றை மீண்டும் அதே பள்ளி அல்லது மருத்துவமனை வளாகத்திற்குள் விடக் கூடாது எனத் தீர்ப்பளித்துள்ளது. அதற்குப் பதிலாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரத்தியேக விலங்குப் பாதுகாப்பு மையங்களில் தான் விட வேண்டும் என்று நீதிமன்றம் இன்று மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
பாதிப்பு
தொடர்ச்சியாகத் தெருநாய்கள் கடித்துக் குழந்தைகள், முதியவர்கள் அவ்வளவு ஏன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கூட பாதிக்கப்படும் சம்பவங்களை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் நீதிபதிகள், "பூமியில் தகுதியுள்ளது மட்டுமே வாழும் என்ற டார்வினின் தத்துவத்தை இங்கே சமுதாயத்தில் பலவீனமாக இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது திணிக்க முடியாது. சட்டப்பூர்வ அமைப்புகள் இருந்தும், மனித உயிருக்கு வரும் ஆபத்துகளைத் தடுக்காமல் மாநில அரசுகள் வெறும் வேடிக்கை பார்க்கும் ஒரு நபராகக் கூடாது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தார்மீகக் கடமை!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை உள்ளது
இந்தத் தீர்ப்பில் இந்திய அரசியல் சாசனத்தின் மிக முக்கிய பிரிவான 21 குறித்தும் உச்ச நீதிமன்றம் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது. அதில் "ஒவ்வொரு குடிமகனும் எவ்விதத் தாக்குதல் அச்சமோ அல்லது பொது இடங்களில் நாய்க் கடி போன்ற உயிருக்கு ஆபத்தான சூழலோ இல்லாமல், சுதந்திரமாக நடமாடவும் பொது இடங்களைப் பயன்படுத்தவும் உரிமை உண்டு. அதுவும் ஆர்ட்டிக்கிள் 21ன் கீழ் வரும் ஒரு பகுதி தான்" என்றனர்.
மேலும், குடியிருப்புப் பகுதிகள் தாண்டி தற்போது விமான நிலையங்கள் போன்ற மிக முக்கியமான பொது இடங்கள் வரை இந்த நாய்க் கடி அச்சுறுத்தல் நீண்டுள்ளது என்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் இருக்கும் மிகப் பெரிய குளறுபடிகளையே இது காட்டுகிறது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications