மத்திய அரசுக்கு சிக்கல்! வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகள்-ஏப்.15-ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புதிய வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் வரும் 15-ந் தேதி விசாரிக்க இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் திமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவைகளின் சார்பாக, வக்பு சட்டத்துக்கு எதிராக இதுவரை 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் நாடாளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆளும் கூட்டணி கட்சிகளின் பரிந்துரைகளுடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்த்து வாக்களித்த போதும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் தந்தார். இதனையடுத்து இந்த மசோதா, சட்டமாக நடைமுறைக்கும் வந்தது.
மத்திய பாஜக அரசின் இந்த வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி வழக்கு தொடர்ந்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுத் தாக்கல் செய்தார்.
இதேபோல அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜாமியாத் உலாமா இ ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகளும் வக்பு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. மொத்தம் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் தங்களது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மத்திய அரசும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதும் ஏப்ரல் 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications