தமிழக போலீஸ் பகீர் பதில்- கோவை ஈஷா மைய வழக்கை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
டெல்லி: கோவையில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் இருந்து பலரும் காணாமல் போயிருக்கின்றனர்; ஈஷா யோகா மையத்துக்குள்ளேயே தனியாக தகன மேடையும் அமைக்கப்பட்டுள்ளது; ஈஷா யோகா மையத்தில் காலவதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்களை தமிழ்நாடு போலீசார் தெரிவித்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
கோவையில் செயல்பட்டு வருகிறது சர்ச்சைக்குரிய சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம். இந்த மையத்தில் தமது 2 மகள்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாக கோவை பேராசிரியர் காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஈஷா மையத்தில் கடந்த அக்டோபர் 1,2 ஆகிய தேதிகளில் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

ஆனால் ஈஷா மையமோ உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனால் ஈஷா மையத்தில் போலீசார் விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக போலீசார் 23 பக்க விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் ஈஷா மையம் தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா மையம் மீதான புகார்கள், வழக்குகள் விவரங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஈஷா யோகா மையத்துக்கு சென்ற பலரும் காணாமல் போய்விட்டனர்; அவர்கள் எங்கே என்பதும் தெரியவில்லை; ஈஷா யோகா மையத்திலேயே தகன மேடை ஒன்றும் அமைத்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலையும் போலீசார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஈஷா மையம் நடத்தும் மருத்துவமனையில் காலாவதியான மற்றும் போலியான மருந்துகளையும் விற்பனை செய்கின்றனர் எனவும் தமிழ்நாடு போலீஸ் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈஷா மையம் மீதான இந்த பகீர் குற்றச்சாட்டுகள் அடங்கிய தமிழக போலீசார் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications